தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்படவிருக்கின்றது.
வன்னிப் பகுதியில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதனை அகற்றும் பணியில் சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவும் வகையில் ஏற்கனவே தமது கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவுகள் பலவற்றை இந்தியா அனுப்பிவைத்திருக்கின்றது.
இதன் ஒரு பகுதியாகவே கண்ணிவெடிகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றை இந்தியா அனுப்பிவைக்கவிருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.
வன்னியில் இடம்பெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்காக தமது இராணுவ மருத்துவக் குழு ஒன்றை இந்தியா ஏற்கனவே அனுப்பிவைத்திருக்கின்றது. இவர்கள் தற்போது செட்டிக்குளம் பகுதியில் சேவையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.