கொழும்பு: இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடுச் சந்தியைச் சேர்ந்த பொதுமக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, இன்று மதியம் 2 மணியளவில் சிறிலங்கப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
முறிகண்டி கோவிலில் இருந்து அக்கராயன் வீதியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானத் தாக்குதலில் 2 பேர் பலி!
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டு பகுதியில் சிறிலங்க விமானப் படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்தனர்.
கற்பாட்டில் உள்ள பொதுமக்களின் வீடுகளின் மீது இன்று பிற்பகல் 2 மணியளவில் கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இத்தாக்குதலில் 10 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. அவ்வீடுகளில் வசித்த மக்கள் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்தனர்.
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்- 2பேர் பலி!
கிளிநொச்சி மாவட்டம் மல்லாவியில் ஆம்புலன்சின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அப்பாவி மக்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளாங்குளம்- துணுக்காய் வீதியில் நேற்று இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.