டிசம்பர். 6: பாபர் மசூதி இடிப்பு தினம் குறித்து பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வின் சிறப்பு பேட்டி
, வெள்ளி, 6 டிசம்பர் 2013 (18:47 IST)
டிசம்பர். 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நமது வெப்துனியா ஊடகத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி.
இன்று டிசம்பர். 6 - பாபர் மசூதி இடிப்பு நாள், பாபர் மசூதி இருக்கும் இடம் - ராமர் பிறந்த இடம் என்கிற கருத்தின் வரலாற்று பின்னணி என்ன?ராமர் பிரேத்தா யுகத்தில் பிறந்ததாக சொல்லுகிறார்கள். த்ரேத்தா யுகம் என்பது பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டமாகும். இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதை நான் சொல்லவில்லை.அயோத்தி மகாத்மியம் என்ற நூல் இருக்கிறது. அந்த நூலில் தசரத மன்னனுடைய நான்கு புதல்வர்களும் கெளசல்யாவின் வீட்டில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். பாபரி மஸ்ஜித் இருக்கின்ற இடத்திற்கு பல மீட்டர்கள் தூரத்தில்தான் தற்போதும் கெளசல்யா பவன் இருக்கிறது. ஆக பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்வது சரியாக இருக்க முடியாது. அதுமட்டுமல்ல ராமர் பெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயத்தை விக்ரமாதித்தன் கட்டினார். அந்த ஆலயத்தைத்தான் இடித்துவிட்டு அங்கு பாபரால் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.உதாரணமாக சொல்லவேண்டுமானால், சமஸ்கிருத மொழியிலிருந்த ராமாயணத்தை ராமச்சந்திரமணாஸ் என்று ஹிந்துஸ்தானி மொழியில் மொழிபெயர்த்தவர் துளசிதாசர். அவர் அந்த அயோத்தி நகரத்தைச் சார்ந்தவர்தான். அந்த காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். தன்னுடைய காப்பியத்தின் நாயகனான ராமருடைய கோவிலை பாபர் படையெடுத்து வந்து இடித்தார். அங்கே ஒரு பள்ளிவாசலை கட்டினார் என்று ஒரு குறிப்பைக் கூட பார்க்க முடியவில்லை. கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட காலகட்டத்தில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கும் அந்த பகுதியிலே வசித்து வருகிறார். அவர் பாபர் ஆட்சியைப் பற்றி பல விமர்சனங்கள் செய்திருக்கிறார். ஆனால் ராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை பாபர் இடித்தார் என்று எந்த விமர்சனத்தையும் அவர் வைக்கவில்லை.பாபர் எப்படிப்பட்ட ஒரு ஆட்சியாளராக இருந்தார் என்று சொன்னால் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயிலியே உன்னுடைய மக்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சி உண்பதை விரும்பவில்லை. எனவே நீ மாட்டிறைச்சி உண்ணக்கூடாது. ஆலயங்களை இடிக்கக்கூடாது என்று உயில் எழுதியிருக்கிறார். அந்த உயில் இப்போதும் டெல்லி தேசிய அருங்காட்சியத்திலே வைக்கப்பட்டுள்ளது. இப்படியாக பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். இல்லாத ஒரு ஆலயத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டதுதான் பாபரி மஸ்ஜித் என்பது சங்பரிவார் அமைப்புகள் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக உற்பத்தி செய்த ஒரு பொய்யான தகவல் என்பதுதான் எனது கருத்து.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து உங்கள் கருத்து?பாபரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் பாபரால் கட்டப்பட்டதில்லை. பாபருக்கு முந்தைய ஆட்சியாளர்கள்தான் இந்த பள்ளிவாசலை கட்ட துவங்கினார்கள். இந்த மஸ்ஜித் கட்டிமுடிக்கப்படாத ஒரு சூழலில் மீர்பாகி என்ற பாபரின் ஆளுநரால் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு தனது ஆட்சியாளர் பெயரையே அவர் சூட்டுகிறார். தொடர்ச்சியாக அந்த பள்ளிவாசலிலே வழிபாடுகள் நடந்து வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இது ராமர் ஆலயம் இருந்த இடம் என்று யாரும் உரிமை கோரவில்லை என்று நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.1949
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு தொழுகை நடத்தி முடித்துவிட்டு முஸ்லீம்கள் சென்றபிறகு ஒரு கும்பல் பள்ளிவாசலுக்குள்ளே நுழைந்து பூட்டை உடைத்து ராமர், லக்ஷ்மணன், அனுமன், சீதை சிலைகளை வைத்துவிட்டனர். இதுகுறித்து அயோத்தி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின் எப்.ஐ.ஆரில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, "கள்ளத்தனமாக உள்ளே நுழைந்து சிலைகள் வைக்கப்பட்டன" என்று. அப்போது என்ன செய்திருக்க வேண்டும் என்று சொன்னால் இந்த சிலைகளை அகற்றி பள்ளிவாசலை முஸ்லீம்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அன்று அவுத் மாநிலத்தினுடைய, அதாவது இன்றைய பைசாபாத் மாவட்டத்தினுடைய ஆட்சியராக இருந்த, அங்கே மேஜிஸ்ட்ரேட் என்று அழைக்கப்படும் கே.கே.நயார் நியாயத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டார். அதனால்தான் அவர் பாரதிய ஜன சங் சார்பாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பள்ளிவாசல் பூட்டப்பட்டது. முஸ்லீம்கள் அதன் அருகே செல்வதைக் கூட தடுத்தார்கள்.இந்த சூழலில்தான் பிப்ரவரி 2 ஆம் நாள், 1986 ஆம் ஆண்டு இந்த பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பென்ச்சில் நிலுவையில் உள்ள சூழலிலே ஒரு சாதாரண மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார் என்ற காரணத்துக்காக பூட்டுகள் உடைக்கப்படுவதற்கு உத்தரவிடப்படுகின்றது. அதற்கு பிறகு அங்கே வழிபாடுகள் நடைபெற்று வரும் ஒரு சூழலைப் பார்க்கின்றோம். இது தொடர்பாக வழக்குகள், பிரச்சனைகள் இருக்கின்ற சூழலிலே, இழந்துவிட்ட செல்வாக்கை மீட்க அத்வானி தலைமையில் ரத யாத்திரை போன்ற நிகழ்வுகளும், ராமர் பேரிலே மத உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்த நிலையிலேதான் 1992 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் நாங்கள் கரசேவை செய்யப் போகிறோம் என்று அறிவிப்பு செய்தன.இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்னது, கரசேவையில் பஜனைகளும், கீர்த்தனைகளும்தான் இருக்க வேண்டும். அந்த பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடிதான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுருத்தியது. தீர்ப்பே சொன்னது. ஆனால் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு 1992, டிசம்பர் 6 ஆம் நாள் உலக மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது வெளிச்சத்திலே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்டது பாபரி மஸ்ஜித் மட்டுமல்ல. இந்தியாவினுடைய வழிபாட்டு உரிமை; இந்தியாவினுடைய மதசார்பின்மை; இந்தியாவினுடைய சமூக நல்லினக்கம்; அனைத்தையும் அந்த தீவிரவாதிகள் இடித்து தரைமட்டமாக்கினார்கள் என்பதுதான் யதார்த்தமான நிலை.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட வகுப்பு கலவரங்கள் குறித்து உங்கள் கருத்து?பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக மும்பையிலே டிசம்பர் 1992-லும், ஜனவரி 1993-லும் மிகப்பெரிய அளவில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்கள் வெடித்தன. இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் மிகத்தெளிவாகச் சொன்னது, மும்பையில் நடைபெற்ற கலவரத்திற்கு சிவசேனா மிக முக்கியமான காரணம். சிவசேனா தலைவர் பால்தாக்ரே ஒரு ராணுவ ஜெனரல் போல இந்த கலவரத்தை வழிநடத்தினார் என்று அவர் தாக்கல் செய்த அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த பால்தாக்ரே இறந்தபோது அவர் தேச மரியாதையுடன், அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதைப் பார்க்கிறோம்.