சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவிற்கு செல்பவர்களிடம் இருந்து நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து சென்னையில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. அலங்கோலமாக கிடந்த மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டிருந்த பூங்காக்கள் 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
விடுமுறை நாட்களில் கடற்கரை சாலையில் குவியும் இளைஞர்கள், கபடி, கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடி வந்தனர். இந்த பூங்கா புதுப்பிப்பு காரணமாக மெரினாவில் விளையாட அரசு தடை விதித்ததோடு, காவல்துறை மூலம் கண்காணித்தது. இந்த தடையால் கொதித்தெழுந்த இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு வழியாக இளைஞர்களை சமாதானப்படுத்தி மாநகராட்சி விளையாட்டு திடல்களை ஒதுக்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு.
சென்னை அண்ணாநகரில் சில லட்சம் செலவில் அரசு சார்பில் பூங்கா புதுப்பிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் பூங்காவிற்கு வருபவர்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. அதனால்தான் விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டவரில் ஏற பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வசூல் வேட்டையை மாநகராட்சி நடத்துகிறது. சென்னை மைலாப்பூரில் உள்ள நாகேஸ்வராவ் பூங்காவில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் உலகத் தரம் வாய்ந்த பூங்காவாக செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த செம்மொழிப் பூங்காவிற்கு செல்ல தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் தேதி ''பொதுமக்கள் பார்வைக்கு செம்மொழி பூங்கா திறந்துவிடப்படும் தேதி தெரியாததால், பூங்காவை சுற்றிப் பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்'' ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதற்கு தமிழக அரசு மறுநாளே விளக்கம் அளித்தது. எப்படியென்றால், ''பூங்கா திறந்து வைக்கப்பட்ட முதல் நாளே சுமார் 1600க்கும் மேற்பட்ட பெரியவர்களும், குழந்தைகளும் இரவு 10 மணி வரை மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். தொடர்ந்து 25ஆம் தேதி அன்றும் 2,300க்கும் மேற்பட்ட பெரியர்களும், குழந்தைகளும் செம்மொழிப் பூங்காவினை பார்த்துள்ளனர். அதே 25ஆம் தேதி அன்று ஏராளமான பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் செம்மொழிப்பூங்காவிற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருப்பதும் உண்மையல்ல. குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது தவறான செய்தி. இது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்'' என்பதுதான் அரசின் விளக்கம்.
இந்நிலையில் நாளை முதல் சென்னை நகர மக்களின் நடைப் பயிற்சிக்காக செம்மொழிப் பூங்கா காலை 6 மணி முதல் 8 மணிவரை திறக்கப்பட உள்ளது. அதோடு பொதுமக்களின் பார்வைக்காக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பூங்காவிற்கு செல்ல நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கை பயன்படுத்த நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாயும், நடைப் பயிற்சிக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.150ம், இரண்டு சக்கர வாகனங்களுக்கு 3 மணி நேரம் வரை 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 மணி நேரம் வரை 10 ரூபாயும், இந்த இரு வாகனங்களுக்கும் 3 மணி நேரத்திற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 ரூபாயும், பெரிய, சிறிய வேன்களுக்கு கட்டணம் முதல் மூன்று மணி நேரத்திற்கு 25 ரூபாயும், அதற்கு மேலான ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே நிறுத்த அனுமதி அளித்துள்ள அரசு, பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள், வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுப் பண்டங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் அரசு கஜானாவை பெருக்கிக் கொள்ள சுற்றலாப் பயணிகளின் வசதிக்காவும், சிறுவர்களுக்காகவும் தனியாக உணவகங்கள் அமைக்கப்பட உள்ளது.
செம்மொழிப்பூங்கா என்ற பெயரில் தற்போது வசூல் வேட்டை ஆரம்பித்துள்ள அரசு, ஜனவரியில் பிரதமர் திறக்க உள்ள அடையாறு பூங்காவிற்கு இதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி.
பூங்கா திறந்து வைக்கப்பட்ட நாளன்றும், மறுநாள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்த்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், பூங்காவை பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக செய்தி வெளியிட்டிருப்பதை உண்மையாக்கும் வகையில் இனி பணம் கொடுத்து செம்மொழிப் பூங்காவிற்கு செல்ல மாட்டார்கள் என்பது நிச்சயம்.
சென்னை மாநகரிலுள்ள பல பூங்காக்களை தனியார் நிறுவனங்கள் எடுத்துக் கொண்டு பராமரித்து வருகின்றன. அதுபோல் இந்த பூங்காக்களையும் தனியார் நிறுவனங்களின் பராமரிப்பிற்கு விட்டுவிடலாமே? எதற்காக பொது மக்களிடம் வசூல் வேட்டை நடத்த வேண்டும்? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
பதில் சொல்லுமா அரசு?