''நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை தி.மு.க.வை ஆட்சிக்குவர விடமாட்டேன்'' என்று பேசியுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகமதுபேட்டையில் நடந்த பக்ரீத் கொண்டாட்டத்தில் நேற்று பங்கேற்ற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்!
கருணாநிதி மற்றும் திமுக மீது ஈழத்தமிழர்களை காப்பாற்ற தவறியது, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட துறைகளை ஆக்கிரமித்தது, ஸ்பெக்ட்ரம் போன்ற பல குற்றச்சாற்றுக்கள் ஒருபுறம் சுமத்தப்பட்டாலும், நல்ல பல மக்கள் நலத்திட்டங்களை அவரது அரசு செய்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது தி.மு.க. 5வது முறையாக கருணாநிதி முதலமைச்சரானார். ஆட்சிக்கு வந்ததும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார்.2 வதாக கூட்டுறவு விவசாய கடனை ரத்து செய்தார்.
இதைத் தொடர்ந்து குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, ஏழை பெண்களுக்கான திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய், கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், பிற்படுத்தப்பட்டோருக்கு 25லிருந்து 31 சதவீதமாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 16லிருந்து 18 சதவீதமாகவும் இட ஒதுக்கீட்டை உயர்த்தியது.
உருது பேசும் முஸ்லிம்கள், கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. வன்னியர் சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளித்தது. தாழ்த்தப்பட்டோருக்கும், வருமான வரம்புக்கு உட்பட்டு பெண்களுக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.
பெரியார் நினைவு சமத்துவபுரம், உருது அகாதெமி, குமரி முனையில் திருவள்ளுவர் சிலை, தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது, காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், பெண்களுக்கும் சொத்துரிமை சட்டம், அரசுப் பணியில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு, கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் ரத்து, ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், விதவைகள் மறுமண உதவித் திட்டம், கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக்குழு திட்டம், தமிழ் -ஆங்கிலம் இருமொழித் திட்டம், 12ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்து கழகங்கள் உருவாக்கம், புதுமுக வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி, 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி.
மானிய விலையில் மளிகைப் பொருள்கள், வருமுன் காப்போம் திட்டம், 1 கோடி ஏழைகளுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம். ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடு என இப்படி பல நல்ல திட்டங்களை முதலமைச்சர் கருணாநிதி அறிவித்து செயல்படுத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடு ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்துமுறை தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட மாட்டேன் என்று விஜயகாந்த் சொல்வது, எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது அவருக்கே வெளிச்சம்! கூட்டணிக்கு அவசரம் காட்ட மாட்டேன் என்றும் விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
ஒரு பக்கம் விஜயகாந்த்துடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேசி வந்தாலும் ஜெயலலிதாவின் குறிக்கோள் காங்கிரசை இழுத்துவிட வேண்டும் என்பதுதான். மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று விஜயகாந்த் கூறி வந்தாலும் வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் 2006ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஒரு இடமும், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரு இடமும் கிடைக்காமல் போனது போல் வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதே நிலை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இன்று கூட தே.மு.தி.க. அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், காங்கிரஸ் புதிதாக 3வது அணி அமைக்க முன் வந்தால் நாங்கள் அதை ஆதரிப்போம் என்றும், இன்னும் ஓரிரு மாதங்களில் தெளிவான முடிவு ஏற்பட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் தான் முதலமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று விஜயகாந்த் நினைத்தாலும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலை(வர்)கள் விடுவார்களா என்ன?
''தனக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக கூறும் கருணாநிதி, பதவி ஆசை இல்லாமலா தந்தை முதலமைச்சர் பதவியிலும், மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவியிலும் இருக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜயகாந்த்.
ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை திடீரென்று வந்தது இல்லை. சிறுவயதிலேயே அரசியலில் ஈடுபட்டு மிசா காலத்தில் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தவர். நாள் விடாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் ஸ்டாலின், பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 100 மணி நேரத்திற்கு மேல் மேடையில் நின்று மகளிர் குழுவிற்கு சுழல் நிதி வழங்கும் சாதனையை படைத்துள்ளார். அப்படிப்பட்ட ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது எந்த தவறும் இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மக்களுடன் கூட்டணி, கூட்டணிக்கு அவசரப்படமாட்டேன், தனித்துதான் நிற்பேன் என்று விஜயகாந்த் பேசுவதை நிறுத்திக்கொண்டு 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 10 இடங்களையாவது பிடித்துக்கட்டிவிட்டு, அதன்பின்னர் திமுகவை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்று வீரவசனம் பேசுவது அவரது கட்சிக்கும் நல்லது! அவருக்கும் நல்லது!