Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவ‌ர் டோ‌ஸ் அபாய‌ம்!

முத்துக்குமார்

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (16:26 IST)
webdunia photoFILE
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மருத்துவ வழக்கு ஒன்றை சந்தித்தது. அதாவது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவனுக்கு 1996ம் ஆண்டு கடுமையான காய்ச்சல் வந்தது. இதற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சிப்ரோஃப்ளாக்சஸின் என்ற ஆன்ட்டி-பயாடிக் மருந்தை கொடுத்துள்ளார்.

இதனால் அந்த சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டது. சிப்ரோஃப்ளாக்சஸின் என்ற மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்று கூட தெரியாத ஒரு மருத்துவரின் கைவரிசையால் அந்த சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டது. இந்த மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என்பதற்கான ஆதாரத்தையும், இதனை பயன்படுத்த அரசு விதித்திருந்த தடை ஆணை நகலையும் சிறுவனின் பெற்றோர்கள் நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அந்த மருத்துவர் உரிய இழப்பிடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று அதிசய தீர்ப்பை அளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறுவனின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவரின் அலட்சியப் போக்கை கண்டித்ததோடு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் கொண்டு வந்து குவிக்கின்றனர் என்றும் இவை மிருகங்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுவதில்லை, மாறாக மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் அந்த சிறுவனுக்கு ரூ.1லட்சம் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இது மிகவும் சிந்திக்கப்படவேண்டிய ஒரு விஷயம். இன்று கிராமப்புறங்களில் கட்டாய மருத்துவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பின் காலத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவர்கள், எவ்வளவு ஆண்டுகள் படித்தாலும், மருத்துவ சிகிச்சையில் அற உணர்வை கடைபிடிக்கிறார்கள் என்று உறுதியாகக் கூறமுடிவதில்லை.

எது தடை செய்யப்பட்ட மருந்து, எது குழந்தைகளுக்கு கொடுக்கப்படக் கூடாது என்பதைக் கூட அறியாத இவர்களால் நாட்டிற்கு என்னதான் பயன் என்று தெரியவில்லை.

தனியார் மருத்துவமனைகளில் பணம் செலவழித்து பெறும் சிகிச்சையே இப்படியிருக்கிறது என்றால், அரசு மருத்துவமனைகளின் நிலையை யோசிக்கவே முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மருந்துகளின் தரம் பற்றி எவரும் இது வரை கேள்விகளை எழுப்புவதில்லை.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வீரியமிக்க மாத்திரைகள்!

உதாரணத்திற்கு ஒன்றை கூறவேண்டுமென்றால், உயிரைக் காப்பாற்றும் ஒரு சில மருந்துகள் தவிர அன்றாடம் நமக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மற்றும் சில சாதாரண நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மருந்துகள் உண்மையில் தரமானவைதானா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

டெண்டர் முறையில் ஆகக் குறைந்த விலைக்கு ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட மருந்திற்கான ஆர்டர் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் அதனை களைய கொடுக்கப்படும் "அல்பென்டசோல்" என்ற மாத்திரை வெளியில் 7 ரூபாய்களுக்கும் அதிகம். ஆனால் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் அல்பென்டசோல் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்று தெரியுமா? ஒரு மாத்திரை 15 அல்லது 20 காசுகள். வெளியில் 7 ரூபாய்களுக்கும் அதிகமாக விற்கப்படும் ஒரு மாத்திரை இங்கு 15 அல்லது 20 காசுகளுக்கு ஒரு நிறுவனம் வழங்குகிறது என்றால் அதில் என்ன தரம் இருக்க முடியும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான் இந்த அல்பென்டசோல் உதாரணம்.

webdunia photoFILE
தனியார் மருத்துவர்களுக்கோ வேறு விதமான நெருக்கடி. தம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை விரைவில் குணப்படுத்திக் காட்டவேண்டும் என்ற நெருக்கடியே அது. அதிகப் பணத்தையும் கறக்கவேண்டும். விரைவில் குணப்படுத்தவும் வேண்டும். இந்த நெருக்கடியில்தான் அளவுக்கு அதிகமான டோஸ்களில் மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர். வேகமாக குணம் பெற வேண்டும் நோயாளிகளும் விரும்புகிறார்கள். எனவே மருத்துவர், தேவையைவிட அதிக சக்தி வாய்ந்த மாத்திரை கொடுக்கும்போது, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.

சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டது. 100 டிகிரி வரையான காய்ச்சல்தான் அது. லேசான குளிர், மற்றும் தலைவலி. அவ்வளவே.

இதற்கு ஒரு மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரகளோ "அபாரம்"! ஒரு 70/80 ரூபாய்களுக்கு மாத்திரைகளை 2- 3 நாட்களுக்கு எழுதிக் கொடுத்தார்.

அதாவது காய்ச்சல் என்றால் முதலில் ஒரு பாராசிடமால், ஒரு குறைந்த வீரிய ஆன்டி பயாடிக், ஆகியவற்றை கொடுத்து விட்டு, மீண்டும் எத்தனை மணி நேரட்தில் காய்ச்சல் திரும்பவும் வருகிறது என்று பார்த்து, தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால், யூரின் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யவேண்டும். அது என்ன மாதிரியான நோய்க்கிருமி, பாக்டீரியாவா, வைரசா என்று தெரிந்த பிறகே உறுதியான டோஸ்களுடன் மாத்திரிகளை பரிந்துரை செய்யவேண்டும். இதுதான் நடைமுறை.

ஆனால் இவர் எடுத்த எடுப்பிலேயே "ஃபுளூரோகுவினலோன்" வகையறாவின் உயர்ந்தபட்ச ரசாயன மாத்திரையான "லெவோஃப்ளாக்சஸின் 400 மி.கி. என்ற மாத்திரைகளை பரிந்துரை செய்தார். அதோடு பாரசிடமால் 650மி.கி. லேசான குளிர்தான், அதற்கே மலேரியாவிற்கு கொடுக்கக் கூடிய லேரியாகொ டபுள் ஸ்ட்ரெந்த். அது தவிர இருமலுக்கு சாதாரண இருமல் மருந்து கொடுக்கவில்லை, "ஆம்ப்ராக்சால்" என்ற சக்தி வாய்ந்த மருந்து.

இதுதான் இன்று சாதாரண மருத்துவர்கள் முதல் நிபுணர்கள் வரை உள்ள ஒரு சிகிச்சை முறை. காய்ச்சல் என்றால் கேள்வியின்றி உடனே பாரசிடமால் 650 மி.கி. கொடுக்க வேண்டியது. பாரசிடமால் மருந்தை ஒரு நாளைக்கு 1கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்கள் அறிந்ததே. இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால் லிவர் தாறுமாறாக பழுதடையும் என்பதும் மருத்துவர்கள் அறிந்ததே. ஆனால் முதலில் 325 மி.கி. பாரசிடமால் கொடுத்தாலே போதுமானது.

நாம் லெவோஃபிளாக்சஸின் பற்றி இந்த இடத்தில் தெரிந்து கொள்வது அவசியம்.

உலகிலேயே அங்கிகாரம் பெறுவது மிகக்கடினம் என்று கருதபப்டும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகமான யு.எஸ்.எஃப்.டி.ஏ. லெவோஃப்ளாக்சஸின் மருந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதனால் ஏற்படும் நோஸோகாமியல் நியுமோனியா என்ற நோய்க்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதனை அனைத்து விதமான பாக்டீரியா எதிர்ப்பு மருந்தாகவும் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பக்க விளைவுகள் பட்டியலைப் பார்த்தோமானல் பயங்கரமாக இருக்கிறது. பொதுவாக ஆன்டி பயாடிக்குகளுக்கே உள்ள பக்க விளைவுகளான குமட்டல், வயிறு பாதிப்பு, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை ஆகியவை லெவோஃபிளாக்சஸினுக்கும் உண்டு.

ஆனால் மேலும் சில பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவை தீவிரமான பக்க விளைவுகள் என்று அந்த மருந்து குறித்த தகவலிலேயே உள்ளது. அதாவது நெஞ்சு வலி, சிறு நீர் அளவில் மாற்றம், மயக்கம் ஏற்படுதல், சீரற்ற இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், மேலும் முக்கியமாக மன பிரமைகள் தோன்றுதல், மன உளைச்சல், குழப்பம், பயங்கரமான தலைசுற்றல், மற்றும் தற்கொலை எண்ணங்கள் தோன்றுதல், எதைக்கண்டாலும் அச்சப்படும் ஒரு மனோ நிலை, வழக்கத்திற்கு மாறான சோர்வு, கடுமையான கால் வலி. இந்த பக்கவிளைவுகள் அனைத்துமோ அல்லது ஒன்றிரண்டோ ஏற்பட்டால் கூட உடனடியாக நாம் மருத்துவரை அணுகவேண்டும் என்று அந்த மருந்தின் பயன்பாடு குறித்த பட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்சொன்ன பக்க விளைவுகளில் குழப்பம், பீதி மனோ நிலை, தூக்கமின்மை, தலை சுற்றல், அவ்வப்போது தற்கொலை எண்ணம் இதெல்லாம் ஏற்பட்டது. ஆனால் அது லெவோஃபிளாக்சசின் எடுத்துக் கொண்டதால் என்று தெரியவில்லை. ஏனெனில், மருத்துவர் அந்த மருந்தின் பக்க விளைவுகள் குறித்து குறிப்பிடவில்லை. இவ்வளவு சிக்கலான ஒரு மருந்தை சாதாரண காய்ச்சலுக்கு ஒரு மருத்துவர் பரிந்துரை செய்கிறாரென்றால் அவரது நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

காய்ச்சலிலிருந்து மீண்டாலும், மன உளைச்சல் மற்றும் பீதி மனோ நிலை மறைந்து மீண்டும் எல்லாம் பழைய நிலைக்கு திரும்ப 10 நாள் தேவைப்படுகிறது. இந்த பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக வாருங்கள் என்றோ, மருந்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள் என்றோ அந்த மருத்துவர் எந்த வித எச்சரிக்கையையும் கொடுக்கவில்லை. இது என்ன மாதிரியான போக்கு?

விவரம் தெரிந்தவர்களுக்கே இது போன்று நடக்கிறது என்றால், கிராமங்களிலிருந்து வரும் நோயாளிகள் நிலையை நாம் என்ன கூறுவது? ஒரு சாதாரண காய்ச்சலுக்கே இத்தனை பெரிய விவகாரங்கள் ஏற்படுகிறது என்றால், இன்னும் பெரிய பெரிய வியாதிகள் வந்து சென்னை போன்ற நகரங்களில் உள்ள 5 நட்சத்திர விடுதி போன்று கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அப்பாவி நோயாளிகளை பற்றி நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.

2004 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மலேரியாவை தடுக்கும் மாத்திரைகளை அரசு சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு கொடுத்தனர். இந்த மாத்திரை ஆண்டுக்கு ஒன்று என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அரசு சுகாதார ஊழியர்கள் குழந்தைகளுக்கு 4 மாத்திரைகளையும், சற்று பெரியவர்களுக்கு 6 மாத்திரைகளையும் கொடுத்தனர். இது ஓவர்டோஸ். இதனால் ஒரு 150 குழந்தைகளுக்கு வாந்தி, தலைசுற்றல், மற்றும் மோசமான தலைவலி ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலை உலக சுகாதாரக் கழகம் வெளியிட்டுள்ளது.

சுகாதார விஷயத்தில் நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் அலட்சியப் போக்குகள் என்ணிலடங்காதவை.

webdunia photoFILE
மன நோய் நிபுணர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்யும் மருந்துகள் நாளடைவில் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். ஒரு சிலர் இந்த மருந்துகளினால் நாளடைவில் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மரணத்தை சந்தித்ததும் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை மன நோய் எதிர்ப்பு மருந்துகளின் அளவுக்கதிகமான பிரயோகத்தினால் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும்.

2007 ம் ஆண்டு அமெரிக்க மன ஆரோக்கிய சேவை நிர்வாகக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மன நோய்க்கு கைதேர்ந்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் தூக்க மாத்திரைகளின் 2004- 05ல் 19 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறுகிறது. அதாவது ஒவர்டோஸ் பற்றிய எச்சரிக்கை அறிக்கைதான் இது. கனடா நாட்டின் சுகாதார அமைப்பு, தூக்க மாத்திரைகளை மருத்துவர் எழுதிக் கொடுத்தாலும் நோயாளிகள் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது. இது போன்ற துக்க மாத்திரைகளால் கடும் மறதி ஏற்பட்டு விடுவதாக கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் மன நோயாளிகள் நாளடைவில் தற்கொலை எண்ணம் அதிகம் கொண்டவர்களாக மாறுகின்றனர் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகம் அங்குள்ள மருத்துவர்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றையும் அளித்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கையான டெய்லி டெலிகிராப் சிகிச்சையால் கொல்லப்படும் நூற்றுக்கணக்கானொர் என்ற தலைப்பில் செய்தியே வெளியிட்டது. இந்த செய்தி நடப்பு ஆண்டின் ஜூலை 9ம் தேதி இதழில் வெளிவந்தது. அதாவது மன நோய் சிகிச்சை மருந்துகளை எடுத்துக் கொள்வோரில் நூற்றுக்கணக்கனோர் இறந்து போயுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கடுமையான பக்க விளைவுகளில் சிக்கியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டிய அளவும் மருத்துவர்களுக்கு தெரியவில்லை, அதன் பக்க விளைவுகளும் நோயாளிகளுக்கோ அவர்களது உறவினர்களுக்கோ தெரியப்படுத்தப்படுவதில்லை என்று அந்த பத்திரிக்கை செய்தியில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

வெறும் மன நோய் சிகிச்சைக்கான மருந்துகளில் மட்டும் இந்த விளைவுகள் ஏற்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து மருந்துகளுமே தற்போது வியாதியின் தீவிரத்தன்மையையும் தாண்டிய அளவுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது. ஓவர் டோஸ் என்பது பற்றி உலகச் சுகாதாரக் கழகம் தொடந்து எச்சரிக்கைகளை அளித்தபடியேதான் உள்ளன. ஆனால் மருத்துவர்கள் மட்டும் எந்த வித எச்சரிக்கைகளுக்கும் செவி சாய்ப்பவர்களாக இல்லை என்பது வருத்தத்துகுரிய ஒரு விஷயம்.

அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, கனடா போன்ற பணக்கார நாடுகளிலேயே இந்த கதி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற எழை நாடுகளில் மன நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு அறவே இல்லாத நிலையில், மருந்துகளின் பக்க விளைவினால்தான் இறக்கிறார்கள் என்பது தெரியாமலேயே பல மரணங்கள் நிகழ்ந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

நம்மிடம் ஒருவர் நோய் என்று வருகிறார்களா, அவர்களுக்கு சக்தி வாய்ந்த மருந்துகளை எழுதிக் கொடுத்து எப்படியாவது நாம்தான் அவர்களை குணப்படுத்தினோம் என்று பெயர் எடுப்பதற்காக கடுமையான மருந்துகளை பரிந்துரை செய்யும் போக்கை மருத்துவர்கள் நிறுத்தவேண்டும்.

மக்கள் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி மருந்துகளின் பயன் அதனை எடுத்துக் கொள்ளவேண்டிய முறை, அளவு, அதன் பக்க விளைவுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை தினசரி நடவடிக்கையாக வளர்த்தெடுக்க வேண்டும்.

மருந்து, மருத்துவ முறைபடுத்தல் சட்டம் தேவை!

மோசமான சிகிச்சை, அலட்சியமான சிகிச்சை முறை, அளவுக்கதிகமான மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளுக்கு மருத்துவர்களை சட்ட ரீதியாக பொறுப்பேற்கச்செய்யும் சட்ட மசோதா ஒன்று அவசியம்.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை ஒன்றை வைத்திருக்கின்றன. அவை ஆக்க பூர்வமான பல ஆய்வுகளை நடத்தினாலும், பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்கான ஆய்வுகளையே மேற்கொள்கின்றன.

மேலும், ஒரு மருந்தை மருத்துவர்களிடையே பிரபலப்படுத்துவதில் ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்கும் மார்க்கெட்டிங் உத்திகள் அறமற்ற ஒரு முறையாகவே இருந்து வருகிறது.

மருந்து வேலை செய்யும் முறை பற்றிய தகவல்கள் மற்ற போட்டி நிறுவனங்களின் மருந்துகளை சந்தையிலிருந்து அகற்றுவதற்காகத்தான் உருவாக்கப்படுகிறதே தவிர உண்மையில் மக்களுக்கு அந்த விவரம் போய்ச்சேர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படுவதில்லை.

அலோபதி மருத்துவ முறை இவ்வளவு வளர்ந்து விட்டது, மரணத்தையே வெல்வோம் என்றெல்லாம் முழக்கங்கள் இடுகின்றனர். ஆனால் இன்னமும் விடை தெரியா த, அவிழ்க்க முடியாத பல மர்மங்கள் நிறைந்ததாகவே அந்த வைத்திய முறை இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments