முன்னோடித் திட்டமாக, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பெங்களூரில் மகளிர் இயக்கும் வாடகை கார்களை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய மகளிர் நலத் துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி தில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், மங்களூரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கவர்ச்சி நடனமாடிய பெண்களை தாக்கியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், இதுபோன்று ஆபாச நடனங்களையும் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக பெங்களூர் விடுதியில் இவ்வாறு ஆபாசமாக ஆடியதாக மும்பை, கோல்கத்தாவைச் சேர்ந்த பல பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பெங்களூர் நகரில் பணிபுரியும் பெண்களைப் பாதுகாப்பதற்காக பெண்களே ஓட்டும் வாடகை கார்களை சோதனை அடிப்படையில் இயக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
முதலில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பெண்கள் இயக்கும் வாடகை கார்கள் அறிமுகப்படுத்தப்படும். அதையடுத்து படிப்படியாக ஐடி கம்பெனிகளுக்கும் பிபிஓ நிறுவனங்களுக்கும் பெண்கள் இயக்கும் வாடகை கார்கள் அனுப்பப்படும் என்று அமைச்சர் ரேணுகா தெரிவித்தார்
பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டம் பின்னர் தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
மும்பையில் இந்த திட்டத்தின்படி 53 மகளிர் டாக்சிகள் வெற்றி கரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஓட்டுநர் சிறப்புப் பயிற்சி, கார் வாங்க விரும்பினால் அதற்கு வங்கிக் கடனுதவி போன்ற உதவிகளையும் அளிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.