வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக நாம் மறந்த பொருட்கள் ஏராளம் ஏராளம். அதில் ஸ்டாம்ப், தபால் அட்டை, தந்தி முறை, கடிதம் என யாவும் அடக்கம். இந்த பட்டியலில் தற்போது இடம்பிடித்திருப்பது வாழ்த்து அட்டைகள்.
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களுக்கு முன்பு வாழ்த்து அட்டை விற்பனைக் கடைகளில் கூட்டம் அலை மோதும். தபால் அலுவலகங்களிலும் சுறுசுறுப்பாக வேலை நடக்கும். ஒருவரே 10, 15 வாழ்த்து அட்டைகளை வாங்கி வந்து, நண்பர்கள், உறவினர்களின் முகவரிகளை எழுதி ஒட்டி தபால் பெட்டியில் சேர்த்துவிடுவார்கள்.அது போய் சேர்ந்ததா என்பது அடுத்து வரும் இல்ல விழாக்களில் சந்தித்துப் பேசும்போதுதான் கேட்டறிந்து கொள்வார்கள். நம் வீட்டிற்கு ஒரு 5, 6 வாழ்த்து அட்டைகள் வந்தால்தான் நமக்கு பண்டிகையேத் தொடங்கும். பல நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டன. வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் முறை போய், மின்னஞ்சலில் அனுப்பும் முறை பழக்கத்திற்கு வந்தது. அதிக காசு செலவில்லாமல் இந்த வாழ்த்து அட்டைகளை பலருக்கும் அனுப்பலாம். வாழ்த்து சொல்ல வாழ்த்து அட்டைகளை மின்னஞ்சலில் தேர்ந்தெடுத்து எந்த நாளில் அனுப்ப வேண்டும் என்று நாம் ஒரு நாளை பதிவு செய்துவிட்டால் அது அன்றைய தினத்தில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்று சேர்ந்து விடும். ஆனால் தற்போது இணையத்திலும் வாழ்த்து அட்டை அனுப்புபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைந்துள்ளது.இதெல்லாம் மலையேறிப் போய்விட்டது.. இல்லை இல்லை.. மெயில் ஏறிப் போய்விட்டது. மின்னஞ்சலில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டிருந்த காலமும் தற்போது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் எல்லோர் கைகளிலும் 5 விரலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் 6ஆம் விரலான செல்பேசிதான்.
சில பைசாக்கள் செலவில் தீபாவளிக்கு முன் தினமோ அல்லது தீபாவளி அன்றோ வாழ்த்துக்களை எளிதாக பரிமாறிக் கொள்ளும் வசதியால் யாரும் சில ரூபாய்களையும், தங்களது நேரத்தையும் வாழ்த்து அட்டைக்காக செலவிட தயாராக இல்லை.
மேலும், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்கு குறுந்தகவலில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடும்படி வாழ்த்துக்களை அழகான கோர்வையான வார்த்தைகளில், வரைபடங்களில் அலங்கரித்து அனுப்பிவிட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருந்து விடலாம்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், என்னதான் நீங்கள் இலவச குறுந்தகவல் சேவை பெற்றிருந்தாலும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் நிச்சயம் கட்டணம் வசூலிக்கப்படும். நினைவில் கொள்ளுங்கள்.
நமது வீட்டில் நம் அம்மா காலனா, அரையணாவை எடுத்து வைத்து நமக்கு காண்பித்தது போல, நமது குழந்தைகளுக்கு ஐந்து பைசா, பத்து பைசாக்களை நாம் காண்பிப்பது போல, தபால் அட்டை, வாழ்த்து அட்டைகளையும், உங்களுக்கு உங்கள் நண்பர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காண்பித்து அவற்றின் பெருமையை எடுத்துக் கூறினால்தான் வாழ்த்து அட்டை என்ற ஒரு மரபு நம்மிடையே இருந்ததை நம் பிள்ளைகள் அறிய முடியும்.எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நம் தோழர், தோழிகள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை பத்திரப்படுத்தி, என்றாவது ஒருநாள் அவற்றை எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை ஒரு முறை புரட்டிப் பார்க்கும் அரிய வாய்ப்பு நமது பிள்ளைகளுக்குக் கிடைக்காதே என்பதுதான் முக்கியக் கவலை. ஒரு வேலை, பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்க அவர்களுக்கு நேரமேக் கிடைக்காதோ என்பதும் ஒரு சந்தேகம்தான்.