தீபாவளி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே குதூகலமும், கும்மாளமும்தான்.
பண்டிகை நாளைக் காட்டிலும் அதற்கு முந்தைய நாட்கள்தான் மிகவும் உற்சாகமாகக் கழியும். புத்தாடைகள் எடுப்பதும், இனிப்புகள் செய்வதும், வாங்குவதும், பட்டாசுகள் வாங்கி வெடிப்பதும் என்று நாட்கள் இனிதாகக் கழிகிறது.
webdunia photo
WD
சரி தீபாவளியும் வந்தாகிவிட்டது. அன்றைய தினம் நாம் செய்யும் முதன்மை காரியம் என்றால் அது எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது. அடுத்தது வீடுகளில் தீபம் ஏற்றுவதும், பட்டாசுகள் வெடிப்பதும்.
இதில் வீடுகளில் தீபம் ஏற்றுவது என்பது தொன்று தொட்டு வரும் விஷயம்தான். ஆனால் தீபம் ஏற்றுபது பற்றிய விஷயங்கள் நிறைய இருக்கிறது சொல்வதற்கு.
என்னவென்றால் விளக்குகளில் பல விஷயங்கள் உள்ளன. அதில் முக்கியமானது எத்தனை முகம் கொண்ட விளக்கேற்றுவது என்பதுதான்.
ஒரு முகம் கொண்ட விளக்கேற்றினால் மத்திய பலன் கிடைக்கும். இரண்டு முகம் கொண்ட விளக்கேற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்.
அதுவே மூன்று முகம் கொண்ட விளக்கேற்றினால் புத்திர சுகத்தைக் கொடுக்கும்.
நான்கு முகம் வளத்தை அளிப்பதாகவும், ஐந்து முகம் செல்வத்தையும், அருளையும் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
பலன்களை நாம் சொல்லிவிட்டோம், எத்தனை முகம் கொண்ட விளக்கேற்றுவது என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது.
விளக்கேற்றுவதற்கு பயன்படும் திரியைப் பற்றியும் சொல்லிவிடலாம்.
திரிகளில் பஞ்சுத் திரி, வாழைத்தண்டு நார், வெள்ளெருக்குப் பட்டை, சிவப்பு நிற புதுத் துணி, மஞ்சள் நிறம் கொண்ட துணி போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இதில் பஞ்சினால் திரி இடுவது சிறந்த பலனைத் தரும். அதுபோல் வாழைத் தண்டு நாரினால் தீபம் ஏற்றினால் பாவங்கள், செய்வினைக் கோளாறுகள், தெய்வ நிந்தனைகள் போகும்.
வெள்ளெருக்குப் பட்டையை திரியாகப் பயன்படுத்தும் வீட்டில் செல்வம் பெருகும்.
திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை பாக்கியம் அற்றவர்கள் சிவப்பு நிற துணியைக் கொண்ட தீபம் ஏற்றுவது சிறப்பு. அது போல மஞ்சள் நிற திரியை ஏற்றினால் அம்மன் அருள் கிடைக்கும்.
என்ன இதோடு முடிந்ததா என்று கேட்காதீர்கள்.
எப்படி முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கிறதே சொல்வதற்கு...
பொதுவாக எல்லோர் வீடுகளிலும் கிழக்கை நோக்கித்தான் பூஜை அறை இருக்கும். சில வீடுகளில் அவர்களின் வாஸ்து நிலைப்படி வேறு சில திசைகளை நோக்கியும் இருக்கும்.
webdunia photo
WD
அதன்படி பார்த்தால், பூஜை அறை நோக்கியே நாம் தீபம் ஏற்றவோம். தெற்கு திசையைத் தவிர வேறு எந்த திசை நோக்கியும் விளக்கேற்றலாம் என்கிறார்கள் பெரியவர்கள்.
நல்லெண்ணையைப் பயன்படுத்தி எல்லா தெய்வங்களுக்கும் விளக்கேற்றலாம். மேலும் எல்லா நேரத்திலும் பயன்படுத்தலாம்.
விளக்கேற்ற வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் சேர்த்து விளக்கேற்றினால் அந்த வீட்டில் லஷ்மியின் அருள் தேடி வரும்.
விளக்கேற்ற கடலை எண்ணெயை மட்டும் பயன்படுத்தவேக் கூடாது.
வீடுகளில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி இறைவனை வணங்கலாம். அவ்வாறு இரு வேளைகளிலும் முடியாதவர்கள் அவர்களுக்கு ஏற்ற ஒரு வேளையில் விளக்கேற்றி இறைவனை வணங்குதல் நலம்.
கடைசியாக நாம் சொல்ல வந்ததை மறந்துவிட்டோமே. தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி அலங்கரிப்பது வழக்கம். அன்றைய தினம் நமது பிள்ளைகள் புத்தாடை அணிந்து கொண்டு அங்கே இங்கே ஓடிக் கொண்டிருப்பார்கள். கையில் பட்டாசுகள் வேறு இருக்கும்.
எனவே வாசற்படிகளில் மிகவும் பாதுகாப்பான வகையில் விளக்குகளை ஏற்றி வையுங்கள். பிள்ளைகளிடம் அதுபற்றி முன்னெச்சரிக்கை செய்யுங்கள்.