தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.
எச்1என்1 இன்புளுயன்சா பற்றிய கருத்தரங்கை இன்று துவக்கிவைத்து அவர் பேசியதாவது:
இந்த எச்1என்1 காய்ச்சல் என்ற பன்றிக் காய்ச்சல் நோய் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் பரவியுள்ளது. இந்த நோய் பரவாமல் இருக்க இதுவரை தமிழகம் வந்த விமானப் பயணிகளில் 8.20 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் அறிகுறிகள் உள்ள 500 நபர்களின் சளி பரிசோதனை செய்யப்பட்டு 17 பேரை இந்த நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்த நோய் 106 பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 55 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 51 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். முறையாக சிகிச்சை பெற்றால் 4 நாட்களில் இந்த நோயை குணப்படுத்தி விடலாம். எனவே இந்நோய் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். பள்ளிக் கல்லூரிகளில் இந்நோயை மாணவர்களிடம் எவ்வாறு அடையாளம் காணலாம் என்று ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்த நோய் தாக்கப்பட்டுள்ள 51 பேர்களில் சென்னையில் 35 பேரும், கோவையில் 16 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த நோய் தாக்குண்ட நபரும், இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் நபர்களும் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் இதை தவிர்க்க வேண்டும். இந்நோய் பற்றிய பரிசோதனைக்கு தமிழகத்தில் ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் பரிசோதனை மையங்களை அரசு தொடங்கவுள்ளது. இந்த நோயை பற்றி செவிலியர்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு டாமி ஃபுளு மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. இந்நோயை முன்னதாகவே கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.