கோவையில் நேற்று மட்டும் 11 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் தற்போது 1,700 பேர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்ததை சேர்த்து இதுவரை இந்தியாவில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பரவிய பன்றிகாய்ச்சல் பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் சிறுவன் ஒருவன் பன்றிகாய்ச்சலுக்கு பலி ஆனான். தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரியில் 11 பேர் பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை தவிர 19 வயதான 2 மாணவர்கள் பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கட்டேறிப்பட்டியை சேர்ந்த வாலிபர் மகேஷ்(வயது 28) மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள சைக்கிள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் 2 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பினார்.
அவர் பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி, சளி போன்றவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் இது வரை 32 பேர் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் அவரவர் வீடுகளில் தனி அறையில் மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
நேற்று கோவையில் மேலும் 11 பேருக்கு பன்றிகாய்ச்சல் ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்தது. இதில் 5 பேர் குழந்தைகள் ஆவர். ஒருவர் சட்டக்கல்லூரி மாணவர். இவர் 2 நாட்களுக்கு முன் புனே நகரில் இருந்து திரும்பினார். ராணுவ அதிகாரி ஒருவரும் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரும் சமீபத்தில் புனே நகருக்கு சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று புனே நகரில் சசூன் ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 36 வயதான பினா என்ற பெண் இறந்தார். இந்த பெண் கடந்த 13-ந் தேதி கடும் காய்ச்சலுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்து விட்டார். இந்த மரணத்தையும் சேர்த்து, இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆகி விட்டது.
புனே நகரில் நேற்று மேலும் 18 பேருக்கு பன்றிகாய்ச்சல் ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் உறுதிப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்திய அளவில் 8,658 பேருக்கு பன்றிகாய்ச்சலுக்குரிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,707 பேருக்கு பன்றிகாய்ச்சல் உறுதிப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும் 694 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் இந்திய அளவில் 150 பேருக்கு பன்றிகாய்ச்சல் பரவி இருப்பது, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மராட்டியத்தில் மட்டும் 60 பேர் ஆகும். புனேயில் 18 பேருக்கும் டெல்லியில் 10 பேருக்கும், பெங்களூரில் 10 பேருக்கும், அவுரங்காபாத்தில் 9 பேருக்கும் பன்றிகாய்ச்சல் ஏற்பட்டு இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.