பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைமை மருத்துவர் வி.கனகசபை, சிறப்பு மருத்துவர்கள ் சிவசுப்பிரசங்கர், வெங்கடேஷ், ஜோசப் நவசீலன், ஆனந்த மோசஸ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.
அவர்கள் பேசுகையில், பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கும், அவர்களுடன் நெருங்கி பழகுவோருக்கும் இந்த நோய் வரும் அபாயம் உள்ளது. தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை பன்றி காய்ச்சல் அறிகுறிகள் ஆகும். இவை எல்லாம் இருப்பதாலேயே பன்றி காய்ச்சல் என்று நினைத்து பயப்படத் தேவையில்லை.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பன்றி காய்ச்சல் என்றவுடன் பொதுமக்கள் பீதி அடைந்து விடுகிறார்கள். சாதாரண காய்ச்சல் போலதான் இதுவும். இந்தியாவில் ஏற்கனவே, எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இருக்கின்றன. இவற்றை விடவும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி விடாது.
நோயை தடுப்பதற்கான மருந்துகள் (டாமிப்ளூ மாத்திரை) அரசு மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. நோய் வந்தாலும் 10 அல்லது 15 நாட்கள் மருத்து சாப்பிட்டால் குணமாகிவிடும். இந்த நோய் ஆரம்பத்தில் பன்றிகள் மூலம் பரவி இருக்கலாம். தற்போது ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுகிறது. இருமல், தும்மல், துணி மூலம் மற்றவர்களுக்கு பரவும்.
சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, வாந்த ி, பேதி, பசியின்மை, தலைவலி, உடல்வலி ஆகியவை பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். பொதுவாக, 6 மாதம் முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் எளிதில் பாதிக்கும்.
குழந்தைகளுக்கான சிறப்பு அறிகுறிகள் என்று பார்த்தோமானால் இடைவிடாமல் காய்ச்சல் இருக்கும். உடல் நீல நிறமாகும். எரிச்சல் படுவார்கள். பசி எடுக்காது. பெரியவர்கள் என்றால் குழப்பமுடன் காணப்படுவார்கள். மூச்சுத்திணறல் ஏற்படும். தொடர்ந்து வாந்தி இருக்கும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் இருந்து நோய் பரவாமல் இருக்க சில தடுப்புமுறைகளை மேற்கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கு தெரியாதபடி முகமூடி அணிந்துகொள்ள வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவரின் பொருட்களையோ, துணிமணிகளையோ பயன்படுத்தக்கூடாது. பன்றி காய்ச்சல் நோய், டாமிப்ளு மாத்திரை கொடுத்து குணப்படுத்தப்படுகிறது.
தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இது வழங்கப்படுகிறது. வெளியே மருந்து கடைகளில் கிடைக்கச் செய்தால் பொதுமக்கள் லேசான காய்ச்சல், தும்மல் இருந்தால்கூட உடனடியாக போய் இந்த மாத்திரையை பயன்படுத்திகொள்வார்கள். இதைத் தடுக்கத்தான் அரசு மருத்துவமனைகளில் மட்டும் டாமிப்ளூ மாத்திரை வழங்கப்படுகிறது. பன்றி காய்ச்சலுக்கு தடுப்பூசி மருந்து இதுவரை இல்லை. இதற்கான ஆராய்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் உறுதியாகக் கூறினர்.