இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் அஜய் குமார் கூறுகையில், பொதுவாக, புற்று நோய் சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும். இதனால், ஏழை, நடுத்தர மக்களுக்கு புற்று நோய் சிகிச்சை கிடைக்காமல் போய்விடுகிறது. பணம் இல்லை என்ற காரணத்துக்காக நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதில்லை என்பது எங்கள் குறிக்கோள்.
புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏழையாக இருந்தாலும், அவர்களின் பொருளாதார நிலையை மதிப்பிட்டு சிகிச்சை அளிக்கிறோம். சிகிச்சைக்காக எவ்வளவு தொகையை செலுத்த முடியும் என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். அவர்கள் தர விரும்பும் தொகையை தவணை முறையில் செலுத்தினால் போதும். இதற்கு வட்டி இல்லை.
மேலும், புற்று நோய் சிகிச்சைக்காக அதிக தொகை செலவிட முடியாத நிலையில் உள்ள நோயாளிகளும் வருகின்றனர். அவர்களுக்கு எங்கள் எச்எஸ்ஜி அறக்கட்டளை மூலம் நிதி உதவி செய்கிறோம். அண்மையில்கூட, மைசூரை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் இதன் மூலம் பயன் பெற்றார். இந்த முறை இப்போது பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்படும்.
கடந்த 2000ஆவது ஆண்டில், நான் கர்நாடக அரசின் உடல்நல பாதுகாப்பு திட்டக் குழு உறுப்பினராக இருந்தபோது, உலக வங்கியின் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மைசூர் அருகே உள்ள குண்ட்லுபேட்டை கிராம பெண்களுக்கு சிறுகடன் உதவித் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.
இந்த திட்டத்தை நம்மூர் மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தினால் நல்ல பலன் கிட்டும். ஏழைகளும் நல்லத் தரமான மருத்துவ வசதியைப் பெற வாய்ப்பு ஏற்படும்.
உணவு, கல்வி, மருந்துகள் மட்டும் எந்த காலத்திலும் பணத்திற்காக விற்கப்படக் கூடாது என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால், இந்த கலியுகத்தில் இந்த மூன்றுதான் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு பெரிய வியாபாரமாகிக் கொண்டிருக்கின்றன.