தமிழ் ஈழம் பிறக்கவும் : தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
சென்னை , திங்கள், 13 ஏப்ரல் 2009 (15:51 IST)
உலகத் தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும் வகையில் தமிழ் ஈழம் பிறக்கவும் என்று தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பூக்கள் பூத்துக்குலுங்கும் தமிழ்ப் புத்தாண்டு திருநாளில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சர்வதாரி ஆண்டு, தீவிரவாத ஆண்டாய், பொருளாதார சீரழிவு ஆண்டாய், தமிழினத்தை அழிக்கும் ஆண்டாய் வந்து சென்றது. இன்று பிறக்கும் விரோதி ஆண்டு வளமிக்க ஆண்டாய் மலர்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் அமைதி தழைக்கவும், செல்வம் செழிக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த புத்தாண்டில் ஊக்கமுடன் உழைப்போம், தடைகளை தகர்த்தெறிவோம். சுயநலத் துரோகிகளை தூக்கி எறிவோம், உரிமைகளை மீட்போம், தமிழினம் வாழ வழி வகுப்போம் என்று சூளுரைத்து தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதில் உவகை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சித்திரை இத்தரை மீதில் முத்திரை பதித்திடும் நாள் இந்நாள். புதுப்பொழிவும், பொன்விடியலும் தந்து நற்பொழுதுபுலரும் என்ற நம்பிக்கையுடன் மலர்ந்துள்ள சித்திரை உலகத் தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும் வகையில் தமிழ் ஈழம் பிறக்கவும், தமிழர் தாக்கம் தணியவும், ஈழத் தமிழர் இன்னல் தீரவும், தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும் என்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.