தற்போதைய அரசியல் சூழலில், தேர்தலுக்குப் பின்பு ஒருவேளை பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைய நேர்ந்தால், அதற்கு ஆதரவு அளிப்பது குறித்தோ அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்தோ அ.இ.அ.தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பின்பான கூட்டணி குறித்துத் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலிதாவுடன் பேச முயற்சித்து வருவதாக அத்வானி தெரிவித்தார் என்று நேற்று வெளியான செய்திகள் பற்றி, திருவனந்தபுரத்தில் இன்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி அ.இ.அ.தி.மு.க.தான் முடிவெடுக்க வேண்டும்." என்றார்.
கடந்த 1999இல் தேர்தலுக்குப் பின்பு தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததைக் குறிப்பிட்ட அத்வானி, "கூட்டணி விடயங்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
மூன்றாவது அரசியல் அணி ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைவது சாத்தியம் இல்லை என்றார்.