Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாணா காத்தாடி

பாணா காத்தாடி
, வியாழன், 12 ஆகஸ்ட் 2010 (16:29 IST)
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயா‌ரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸின் புதிய படம், பாணா காத்தாடி. வட சென்னையில் காத்தாடிவிடும் இளைஞர்கள் என்று கதைக்களத்தை வித்தியாசமாக யோசித்த இயக்குனர் வழக்கமான கதை சொல்லல் முறையால் காத்தாடியின் கமர்ஷியல் வேல்யூவை பெருமளவு குறைத்திருக்கிறார்.

WD
வகுப்பில் வருஷா வருஷம் கோட்டடித்தாலும் பட்டம் விடுவதில் மட்டும் ஹீரோ கில்லாடி. இவருக்கு ஒரு காதல். வழக்கம் போல வட சென்னை பையன் அவனுக்கு சகல வசதிகளும் கொண்ட அழகான காதலி. பேஷன் டிஸைனிங் படிக்கும் ஹீரோயின் ஹீரோவை காதலிக்க காரணமாகச் சொல்லும் காட்சிகளில் இமயம் அளவுக்கு ஓட்டை. புராஜெக்டை வெறும் பென்டிரைவிலா வைப்பார்கள்?

காதலால் திருந்தும் ஹீரோவை இன்னும் எத்தனைப் படங்களுக்கு சகித்துக் கொள்வதோ? திருந்திய ஹீரோ தனது காதலை சொல்லப் போகும் இடத்தில் நடக்கும் சிறிய தவறு மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறது. இறுதியில் காதல் என்னானது என்பதுடன் சற்றே சலிப்புடன் முடிகிறது படம்.

ஹீரோவாக நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ளார். வா‌ரிசு என்று ஒதுக்கித்தள்ள முடியாத நடிப்பு. முதல் படத்திலேயே சோகத்தில் சென்டம் அடித்த நடிகர் இவராகவே இருப்பார். சதா க‌ரிச்சுக் கொட்டும் தாய், அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்று கண்ணீர்விடும் போது நெகிழ்ச்சியில் அதர்வா கண்கலங்கும் காட்சி அருமை. இதுபோன்ற சில இடங்களில்தான் இயக்குனரை நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காட்சியில் முரளி வருகிறார். தன்னை அவர் இதயம் ராஜஎன்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடம் சி‌ரிப்பலை.

சமந்தா தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நல்ல நடிகை. இந்தப் படத்தில் அதிக வேலை இல்லையென்றாலும் வேலை கொடுத்தால் வெளுத்து வாங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

சென்னை தமிழில் சில நேரம் ஆஹா போட வைக்கும் மவுனிகா சில நேரம் அத்துமீறல். பிரசன்னா படத்தின் வில்லன். திறமையான நடிகரை ஏன் தமிழ் திரையுலகம் இன்னும் ச‌ரியாகப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தப் படத்திலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் எழுப்பியிருக்கிறார். அதர்வாவை தன்னால் சாகடிக்க முடியாது என்ற சங்கடத்தை அவர் கண நேர கண்ணசைவில் வெளிப்படுத்துவது அற்புதம்.

கருணாசும், டி.பி.கஜேந்திரனும் சேர்ந்து பிபி-யை குறைக்கிறார்கள். யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் மோசமில்லை. கண் தாக்குதே பாடல் காதை இனிமையாக தாக்குகிறது. ‌ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்தின் பிளஸ்களில் ஒன்று.

தேவையே இல்லாமல் குஜராத்துக்கு செல்லும் கதை, அவசியமில்லாமல் சாகடிக்கப்படும் அதர்வாவின் நண்பன் என்று படத்தில் பல ஆறாம் விரல்கள். இவற்றை தவிர்த்திருந்தால் காத்தாடியின் தரம் உயர்ந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil