நட்பு, காதல், பகை, கொண்டாட்டம் அனைத்தும் கலந்த கேம்பஸ் வாழ்க்கை, நினைத்தாலே இனிக்கும். ஒரே கல்லூரியில் படித்தவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே கல்லூரியில் ஒன்று சேர்கிறார்கள்.
நெகிழ்வான இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கொலை முயற்சி நடக்கிறது. அந்த கொலை முயற்சி எட்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலையை சொல்கிறது. அந்த கொலை யாருக்கும் தெரியாத ஒரு காதலை வெளிப்படுத்துகிறது.படிக்க சுவாரஸியமாக தெரியும் இந்தக் கதை மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட் படத்திலிருந்து எடுத்தது. கிளாஸ்மேட் படத்தின் தமிழ் ரீமேக், நினைத்தாலே இனிக்கும்.ஒரு ரீமேக்கை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தப் படத்தை சொல்லலாம். மலையாளத்தில் திட்டமிட்டு செதுக்கிய கதாபாத்திரங்களின் குணாம்சங்களை தமிழ்ப்படுத்துகிறேன் என்று சிதைத்திருக்கிறார் இயக்குனர். கந்தலாக்கப்பட்டிருக்கின்றன காட்சிகளும்.பாடல்களின் வரிகளைப் புரிந்து அதனை யாரேனும் ஹம் செய்தால் அவருக்கு இசையரசர் பட்டம் தரலாம். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஆனால் மற்ற காட்சிகளில்? காட்சிகள் நடப்பது காலையா, மதியமா, மாலையா இல்லை இரவா என்பதை பிரித்தறிய முடியாதபடி கிரேடிங்கில் ஒரே கலரை தீய்த்திருக்கிறார்கள்.எட்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் கதாபாத்திரங்களின் தோற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. எட்டு நாள் கழித்து சந்திப்பதுபோல் இருக்கிறார்கள் அனைவரும்.ப்ரியாமணி பிருத்விராஜை எதிர்த்து தேர்தலில் நிற்பதற்கு சொல்லும் காரணத்தில் வலுவில்லை. கார்த்திக் குமார் கிளைமாக்ஸில் திருந்துவது பக்கா சினிமாத்தனம். ஷக்தி அமுல்பேபி. அவரது மரணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.மொத்தத்தில், நினைத்தாலே இனிக்கும்… நினைத்தாலே கசக்கும் அனுபவம்.