ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அம்மாவின் வாழ்த்துக் கடிதம்
, வியாழன், 13 மார்ச் 2014 (12:49 IST)
ஆயிரத்தில் ஒருவன் படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் டிஜிட்டலில் மேம்படுத்தி நாளை தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிடுகிறார். எம்ஜிஆர் படங்கள் அவ்வப்போது இப்படி அதிக அளவில் தமிழகத்தில் வெளியாவதுண்டு. ரசிகர்களைத் தவிர அரசியல்வாதிகள் யாரும் அது குறித்து இதுவரை பேசியதில்லை. அதிமுக கட்சி போஸ்டர்களில் ஸடாம்ப் அளவுக்குதான் எம்ஜிஆருக்கு இடம். தேர்தல் நேரமில்லையா. முதல்வர் ஜெயலலிதாவே சொக்கலிங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பிறவிப்பயனை அடைந்துவிட்டேன் என்று சொக்கலிங்கத்தை ஆனந்த கூத்தாட வைத்த அந்த கடிதம் கீழே.
திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
எனவேதான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர்.