வாரிசு நடிகர்களில் அசத்துவார் என்று சொல்லப்பட்ட ஆனந்த்பாபு போதைக் காற்றில் புறந்தள்ளப்பட்டது சோகக்கதை. அவரை பல வருடங்களுக்குப் பிறகு கண்டுப்பிடித்து ஆதவன் படத்தில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு தொடர்ச்சியாக நடிப்பார் என்று பார்த்தால், ஆளையேக் காணோம்.
FILE
இந்நிலையில் அவரை மீண்டும் தேடிக் கண்டுப்பிடித்து தனது ஜமாய் படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஜெயக்குமார்.
இவர் 1984 ல் ஒரு படம் இயக்கினார். பாடும் வானம் பாடி. அதில் ஆனந்த்பாபுதான் ஹீரோ. அந்த பாசத்தில் தனது புதிய படத்தில் அவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என அவரை தேடிக் கண்டுப்பிடித்து முக்கிய வேடம் ஒன்றை தந்துள்ளார். இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் வேடம். ஆனந்த்பாபுவும் மறுப்பு சொல்லாமல் சொன்ன நேரத்துக்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள். எட்டையும் வாலி எழுத வேண்டும் என்பது இயக்குனரின் ஆசை. ஐந்தை எழுதி முடித்த நேரத்தில்தான் வாலி மரணமடைந்தார். அதனால் மீதி மூன்றை வேறு பாடலாசிரியரை வைத்து எழுதியுள்ளனர்.
சில நேரம் படத்தின் கதையைவிட அது உருவாகிற கதை சுவாரஸியமாக இருக்கும், இந்தப் படத்தைப் போல.