கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்கயிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்தார்.
முதல் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது தோல்விக்குப் பின் பல ஆண்டுகள் ஒளிப்பதிவை மட்டும் கவனித்து வந்தவர் இரண்டாவதாக எடுத்து வைத்த அடிதான் கோலிசோடா. சிறுவர்களை வைத்து எடுக்கும் படங்கள் வெற்றி பெறும் சதவீதம் மிகக்குறைவு. அதனால் ஒருவித பயத்துடனே இந்தப் படத்தை தொடங்கியதாக விஜய் மில்டன் குறிப்பிட்டுள்ளார்.
FILE
படத்தில் நடித்த சிறுவர்கள் அவரவர் போர்ஷனை நன்றாக உணர்ந்து கஷ்டப்பட்டு நடித்தார்கள். அவர்கள்தான் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பசங்க படத்தில் நடித்த சின்னப் பசங்கதான் இதில் வளர்ந்து நிற்கிறார்கள். படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளே படத்துக்கு வேறொரு நிறத்தை தந்திருக்கிறது. ரசிகர்களும், விமர்சகர்களும் ஒருங்கே சண்டைக் காட்சிகளை பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் விஜய் மில்டன் கூறினார் (வன்முறை அதிகம் என சில விமர்சகர்கள் குறைபட்டிருக்கிறார்கள்).
40 திரையரங்குகளில் கூடுதலாக படத்தை திரையிட இருப்பதாக கூறியவர் இன்னும் சில மாதங்களில் இந்தப் படத்தின் சீக்வெலை தொடங்கயிருப்பதாகவும், இந்தப் படத்தைப் போலவே சீக்வெலும் சிறப்பாக ரசிக்கிற மாதிரி இருக்கும் எனவும் தெரிவித்தார்.