நாகேஸ்வர ராவ் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அந்த செய்தி வெளியானதும் தெலுங்கு சினிமாவின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. அவரின் உடல் வைத்திருந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ரசிகர்களும், நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் திரள ஆரம்பித்தனர். அவரின் உடலுக்கு அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திர பிரதேசம் உருவானதும் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்ட முதல் தலைமுறை நடிகர்களில் முதன்மையானவர் நாகேஸ்வர ராவ். அறுபதுகளில் அன்னபூர்ணா ஸ்டுடியோவை ஆரம்பித்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். 89 வயது ஆகும் நிலையிலும் நடித்துக் கொண்டிருந்தது இன்னொரு சாதனை.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. மகேஷ் பாபு, பவன் கல்யாண், சுமன், ஜுனியர் என்.டி.ஆர், டாக்டர் ராஜசேகர், வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்களும், ஜீவிதா, ரோஜா உள்ளிட்ட நடிகைகளும், எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட இயக்குனர்களும் நாகேஸ்வர ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.