சி.வி.குமாரின் அடுத்த வெளியீடு தெகிடி
, செவ்வாய், 21 ஜனவரி 2014 (19:30 IST)
தமிழ் சினிமாவில் சாதாரண கதையும் படமாகும், சாதாரண நடிகரும் ஹீரோவாவார் என புதிய பாதை காண்பித்தவர் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என்று இவர் தொட்டதெல்லாம் வித்தியாசம். இவரின் அடுத்த வெளியீடு தெகிடி.
வழமையாக தெகிடியிலும் மாஸ் ஹீரோ கிடையாது. சூது கவ்வும் படத்தில் நடித்த அசோக் ஷெல்வன்தான் இதிலும். இவர் பீட்சா 2 விலும் ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயின் ஜனனி ஐயர்.ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இந்த தலைமுறையை திரையரங்குக்கு அழைத்து வரும் க்ரைம் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரையிலரை பார்த்தால் இயக்குனர் பி.ரமேஷ் செமையாக மிரட்டுவார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. பி.ரமேஷுக்கு இதுதான் முதல் படம்.இந்த மாத இறுதியில் படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள். பிப்ரவரியில் படம்.தெகிடி சி.வி.குமாரின் கிரீடத்தில் இன்னொரு மயிலிறகாகட்டும்.