ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு கிடைத்த பாராட்டு அளவுக்கு படத்தை பிரித்தும் மேய்ந்துவிட்டார்கள் பலர். அதில் விமர்சகர் ராஜன்குறையின் பங்கு முக்கியமானது. குட்டிப்புலி போன்ற காவியங்களை மட்டும் கொண்டாடும் விமர்சகர் இவர். படகோட்டி படம் மீனவர்களின் வாழ்வை அப்படியே திரையில் காட்டுகிறது என்று அமெரிக்காவில் தீசிஸ் வெளியிட்ட அறிவுஜீவி.
ஓகே. விஷயத்துக்கு வருவோம். படத்தை பலர் - தெரியாமல் - பாராட்டினாலும் காசு பெயரவில்லை என்பதில் மிஷ்கினுக்கு வருத்தம். நாலுவரி பாராட்டுவாங்க, ஆனா படம் நஷ்டமாகும் என்று முன்னணி நடிகர்கள் யாரும் மிஷ்கின் பக்கம் சாய்வதாக இல்லை. இப்படியொரு சூழலில் சரத்குமாரிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் மிஷ்கின். கதை கேட்டு நடிக்கிற நிலையில் சரத்குமார் இல்லை என்றாலும் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
மிஷ்கினின் இப்போதைய நிலையை வைத்து பார்க்கையில் அவரின் அடுத்த ஹீரோ சரத்குமார்தான் என்று அழுத்தமாக சொல்கிறது அவரின் அலுவலக வட்டாரம்.
பச்சைக்கிளி முத்துச்சரத்துக்குப் பிறகு சரத்குமாரை நல்ல வேடத்தில் பார்த்து நாட்களாகிறது. சரத்குமார் படம் மிஷ்கினுக்கு எப்படி அமையுமோ. ஆனால் மிஷ்கின் படம் சரத்குமாருக்கு மைல்கல்லாக அமைய வாய்ப்புள்ளது.