எனக்குப் பின்னால் சதித்திட்டம்
, ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (15:34 IST)
நீங்கள் பிரபலமாக இருந்தால் எத்தனை மோசடிகள் செய்தாலும், அவை சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டாலும் பயப்பட தேவையில்லை. என்னை கவிழ்க்க நடந்த சதி... எல்லோரையும் நம்பியதுதான் என்னுடைய பலவீனமாகப் போய்விட்டது... நல்லவர்கள் என்று நம்பியவர்கள் என்னை மோசம் செய்துவிட்டனர்... இப்படி நாலு ரெடிமேட் வசனங்களை எடுத்துவிட்டால் போதும். அப்படியும் இருக்குமோ என்ற அனுதாபத்தை பொதுமக்களின் அடிமனசில் தோற்றுவித்து, ஆட்டத்தை தொடரலாம்.
சஞ்சய் தத், ஸ்ரீசாந்த் சமீபத்திய உதாரணம். இன்னொருவர் படாவதி ஸ்டார் சீனிவாசன்.நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத இவரை தொடர்ந்து படங்களில் கோமாளி வேஷம் கட்டவைக்கிறார்கள் தமிழ்ப்பட இயக்குனர்கள். டயர் வெடித்தது போன்று இவர் வாயை பிளப்பதும், வலிப்பு வந்த தினுசில் தலையை ஆட்டுவதும் சகிக்க முடியாத இம்சைகள். மோசடிகளே மூலதனமாகக் கொண்ட இவர் இப்போது மேலே சொன்ன வார்த்தைகைகளை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளார்.இவர் மீது தொடரப்பட்டதில் பாதி வழக்குகள் பொய்யானவையாம் (நல்லவேளை ஒட்டு மொத்தமாக மறுக்கவில்லை). அவர் மீது வழக்குகள் பாய்ந்ததுக்குப் பின்னால் சதித்திட்டம் இருக்கிறதாம். அடுத்த வசனம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆம், நேரம் வரும் போது அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டுவாராம்.சீனிவாசனின் தற்போதைய ஆசை ரஜினியை சந்திக்க வேண்டும். நல்ல ஆசை.