இந்தியாவில் அதிக படங்கள் தயாரிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஹிந்திப் படங்களைவிட தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கை அதிகம். திரையரங்குகளின் எண்ணிக்கை அதற்கு ஏற்ப இல்லை. ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழகத்தில் திரையரங்குகள் உள்ளன. புதிய படங்களை வெளியிடும் நிலையில் உள்ள திரையரங்குகள் 750 க்கும் குறைவு.
முறையான பராமரிப்பின்மை, நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக கொள்ளையடிப்பது போன்ற
காரணங்களால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். பக்கத்து மாநிலம் ஆந்திராவில் செழிப்பான நிலையில் இருக்கும் திரையரங்கு தொழில் இங்கு முடங்கிப் போனதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை செப்பனிடும் முனைப்பு ஒருவரிடமும் இல்லை.
டிசம்பர் 20 ஆம் தேதி பிரியாணி, என்றென்றும் புன்னகை, தலைமுறைகள், த ூம் 3 ஆகிய படங்கள் வெளியாகின்றன. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் என்பதால் பிரியாணியும், என்றென்றும் புன்னகையும் கணிசமான திரையரங்குகளை வளைத்துள்ளன. தலைமுறைகள் மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. த ு hம் 3 உலகமெங்கும் வெளியாவதால் தமிழகத்திலும் கணிசமான திரையரங்குகள் ஒதுக்கியிருக்கிறார்கள்.
இந்த நெருக்கடி காரணமாக சேரனின் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை படம் 20 ஆம் தேதி வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்திருக்கும் ரம்மி டிசம்பர் 27 வெளியாவதாக இருந்தது. இப்போது அதன் வெளியீட்டு தேதியையும் ஜனவரிக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள்.
திரையரங்கு நெருக்கடி காரணமாக லோ பட்ஜெட் படங்கள் பெருமளவில் முடங்கிக் கிடக்கின்றன. திரையரங்கு தொழிலை முறைப்படுத்தாமல் இதற்கு தீர்வு காண முடியாது என்பதே நடைமுறை உண்மை.