எளிமையும் கவித்துவமும், உணர்ச்சிபூர்வமான கதை சொல்லும் முறையும், தேர்ந்த இசையும், கச்சிதமான நடிப்பும், ஒப்பற்ற ஒளிப்பதிவும் என இப்படம் உலகச் சினிமா அரங்கம் வியந்து பார்க்கும்படியாக உருவாக்கபட்டிருக்கிறது,
படத்தில் பாலுமகேந்திரா அவர்களே முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார், தமிழ்திரையில் இப்படியொரு கதாபாத்திரத்தை இதன் முன்பு நான் கண்டதேயில்லை, பாலுமகேந்திரா பிரமாதப்படுத்தியிருக்கிறார், கண்கலங்க வைக்கும் நடிப்பு,
5 டி கேமிராவில் படமாக்கியிருக்கிறார்கள், டிஜிட்டல் சினிமாவின் அதிகபட்ச சாதனையை இதில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் பாலுமகேந்திரா, இளையராஜாவின் இசை படத்தின் உணர்ச்சிப்போக்கினை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தனிச்சிறப்போடு அமைக்கபட்டுள்ளது, இரண்டு சாதனையாளர்களும் ஒன்று சேர்ந்து பெருமைபடும் ஒரு கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்
ஒரு நல்ல தமிழ்படம் எப்படியிருக்கும் எனக் கேட்கும் எனது இளம் தலைமுறைக்கு, இந்தப் படத்தைப் பாருங்கள், இதுவே சிறந்த தமிழ்படம் எனச் சிபாரிசு செய்வேன்.
டிசம்பரில் படம் வெளியாக உள்ளது, அதுவரை காத்திருங்கள்.