விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ராமராஜன் கட்சி மீட்டிங்குகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இப்போது விபத்தின் மிச்ச சொச்சங்களிலிருந்து முழுமையாக மீண்டு மீண்டும் படத்தில் நடிக்க உள்ளார்.
ராமராஜன் கடைசியாக நடித்தது மேதை. படம் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ராமராஜனை கேரக்டர் ரோலில் நடிக்க வைக்க பலரும் ஆசைப்பட்டனர். ஆனால் ராமராஜனோ நடித்தால் ஹீரோ, இல்லையேல் ஜீரோ என்பதில் பிடிவாதமாக இருந்ததால் வேறு படங்களில் அவரை பார்க்க முடியவில்லை.
புஷ்பராஜ் என்பவர் தான் இயக்கும் கும்பாபிஷேகம் படத்தில் ராமராஜனை மீண்டும் ஹீரோவாக்கியிருக்கிறார். சரியான கிராமத்து கதையாம். ராமராஜன் பஞ்சாயத்து தலைவராக வருகிறாராம். நூர்யா என்ற புதுமுகம்தான் ஜோடி.
ஒருகாலத்தில் மனதை வருடம் பாடல்களுக்கு சொந்தக்காரரான சௌந்தர்யன் இசை.
பத்து வருடங்களுக்கு முன்பான காம்பினேஷனை பொறுப்பாக ஒட்டி சேர்த்திருக்கிறார் புஷ்பராஜ். கதையையும் அப்படியே பிடித்திருந்தால் கும்பாபிஷேகம் கொண்டாடப்படும்.