ஜெயா தொலைக்காட்சியில் 2001 ஆம் ஆண்டிலிருந்து ஜாக்பாட் நிகழ்ச்சியை குஷ்பு நடத்தி வருகிறார். மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் சன் தொலைக்காட்சி முன்னணி வகித்தபோது கேம் ஷோவில் மட்டும் குஷ்புவின் ஜாக்பாட் நிகழ்ச்சியே முதலிடத்தில் இருந்தது.
குஷ்புவின் கற்பு குறித்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரு டஜன் தொண்டர்கள் நடத்திய தெருப் போராட்டத்தை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்த பெருமை சன் தொலைக்காட்சிக்கு உண்டு.
குஷ்புவின் ‘இமேஜை’ குறிவைத்து நடந்த இந்த தாக்குதலின் பின்னணியில் கேம் ஷோவில் முதலிடத்தை தவறவிட்ட ஆதங்கமும் இருந்ததாக அப்போது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதெல்லாம் பழங்கதை. குஷ்புவின் ஜாக்பாட்டுக்கு ஸ்பாட் வைத்திருக்கிறது ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம். குஷ்பு திமுகவில் இணைந்ததால் அவரை ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது. படப்பிடிப்பு நடந்து ஒளிபரப்பாகாமல் இருக்கும் எபிசோடுகளையும் பயன்படுத்தப் போவதில்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சன், கலைஞர் என இருபெரும் ஆதரவு இருப்பதால் இந்த நீக்கம் குறித்து குஷ்பு கவலைப்பட்டதாக தெரியவில்லை.