செல்வராகவனின் திரைக்காதல்கள்
, செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (11:22 IST)
செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் முதல்நாள் முதல் காட்சி இன்னும் நினைவிருக்கிறது. பதினெட்டிலிருந்து இருபத்தைந்து வயதுள்ள இளைஞர்களால் நிரம்பியிருந்த திரையரங்கு படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை ஆர்ப்பரித்தபடியே இருந்தது. அதுவரை அவர்கள் திரையில் பார்த்து வந்த தெய்வீக காதலுக்குப் பதிலாக முதல்முறையாக தங்களின் காமம் சொட்டும் காதலை அவர்கள் அனுபவப்பட்டனர்.
செல்வராகவனின் படங்களை தொகுத்துப் பார்க்கையில், அவரின் திரைக்காதல்கள் இரண்டு துருவங்களுக்கிடையே பயணிக்கிறது. அது விடலைப்பருவ காமத்தில் தொடங்கி தெய்வீக காதலில் முடிகிறது. விடலைத்தனத்தில் ஆரம்பித்து அதிலேயே முடித்தால் அந்த காதலுக்கு ஒரு அழுத்தம் கிடைப்பதில்லை, மேலும் கதையும் திரள்வதில்லை. அதனால் தெய்வீக காதலில் அதனை முடித்து வைக்கிறார் செல்வராகவன். நாம் குறிப்பிடும் இந்த தெய்வீகத்தன்மை என்பது தமிழ் சினிமா வடிவமைத்த கற்பனையான புனித காதலாகும். இந்த தெய்வீகத்தன்மை, காதலுக்காக காதலர்களில் யாராவது ஒருவர் இறப்பதற்கோ, தியாகத்துக்கோ துணிவதன் வழியாக சாத்தியமாகிறது.
காதல் கொண்டேன் படத்தில் தனது காதலுக்காக நாயகன் உயிர்விடுகிறான். 7 ஜி ரெயின்போ காலனியில் நாயகி (இதில் நாயகி விபத்தில் மரணமடைந்தாலும் அது காதலுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே இயக்குனரால் கையாளப்பட்டிருக்கும்) மயக்கம் என்ன படத்தில் காதலனின் நோய்க்கூறுக்காக நாயகி மேற்கொள்ளும் கடும் முயற்சிகள். எல்லாப் படங்களிலும் இதனை வெட்டியும் ஒட்டியுமே செல்வராகவனின் திரைக்காதல்கள் அமைவதைப் பார்க்கலாம்.