மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் பொதுமக்களின் உயிரோடு விளையாட முயற்சிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணமில்லா சேவை தொடர ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் மத்திய அரசின் மூலம் ஜிப்மர் என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனம் நடத்தி வரும் மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள்.
புதுச்சேரி மட்டும் இன்றி அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களும் ஜிப்மர் மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர். சாதாரண ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக உயர்தர தனியார் மருத்துவமனைகளை நாடி செல்லமுடியாத சூழலில் ஜிப்மர் மருத்துவமனையே சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோர் மாத வருமானம் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு கீழே இருக்க வேண்டும் என்று நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை கட்டணமில்லா சேவையைப் பெற்றுவந்த பொதுமக்கள், ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்பால் செய்வது அறியாமல் திகைத்து உள்ளனர். இது ஏழை மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய கொடுமை ஆகும்.
ஜிப்மர் நிறுவனத்தைத் தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்ற மத்திய அரசின் சுகாதாரத்துறை 2008 ஆம் ஆண்டில் சட்டம் கொண்டு வந்தபோது, புதுச்சேரி மக்கள் மிகக் கடுமையாக அதனை எதிர்த்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின. அப்போது மத்திய சுகாதாரத் துறையின் சார்பில், ஜிப்மர் நிர்வாகத்தின் செயல்பாடு அப்படியே நீடிக்கும் என்றும், இலவச சிகிச்சை தொடரும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசு நடத்தி வரும் ஏழு மருத்துவ நிறுவனங்களில் புதுடெல்லியில் செயல்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் தவிர, ஏனைய நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இலவச சேவை அளித்து வருவதுபோல், ஜிப்மரிலும் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியது. ஆனால் இதற்கு மாறாக தற்போது ஜிப்மர் நிர்வாகம் மருத்துவ சேவைக்குக் கட்டணம் நிர்ணயித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் பொதுமக்களின் உயிரோடு விளையாட முயற்சிக்கக்கூடாது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணமில்லா சேவை தொடர ஆவண செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.