தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு பேரசிரியர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டடத்தின் மேற்கூரை இன்று ஞாயிறு காலை இடிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகள் உள்ளிட்ட ஐந்துபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர் செய்தியாளர் சார்லஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
காயமடைந்த பலர் திருவாரூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செய்தியாளர் சார்லஸ் கூறினார்.
இந்த கட்டட விபத்து தொடர்பில் நான்குபேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமை உட்பட அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டட விபத்து குறித்த விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடைபெற்ற போது, சுமார் 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் பல தளங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும் சார்லஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.