ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 4
, வியாழன், 17 மே 2012 (20:56 IST)
திபெத்நாங்கள், சாகா என்ற இடத்தை வந்தடைந்தோம். அங்கே மலைகள் பலவிதங்களில் இருப்பதைக் கண்டு ரசித்தோம். பசுமையே இல்லாமல் பாறைகளாய்... மண்வண்ணமாய்... பாதி பசுமையும் மீதி பனியும் மூடிய முகடுகளாய்... முற்றிலும் பனி மூடியதாய் என எல்லாமே பிரமாண்டம்.
சீதோஷ்ண நிலைக்கேற்ப உடலைப் பராமரிப்பது குறித்தும், மாமலையின் மகத்துவத்தையும், மலையாய் விரிந்திருந்த அந்த இறைமையின் தன்மைக்குள் எங்களை இணைத்துக்கொள்வது குறித்தும் சத்குரு விரிவாய் பேசினார். “புத்த மதத்தினர் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக கைலாஷ் மலையைப் பார்க்கிறார்கள். படைப்புகளுக்கு எல்லாம் அடிப்படையான சக்தி என்பதாக இதனைச் சொல்கிறார்கள். யோக வழியில் முதுகுத் தண்டை பிரபஞ்சத்தின் மையமாக வர்ணிக்கிறோம்.கைலாஷ் மானசரோவர் பற்றி நிறையக் கதைகள் உண்டு. யாராவது அங்கே சென்றால், திரும்பி வர மாட்டார்கள் என்று பேசப்படுவதுண்டு. ஆமாம் அப்படி நடந்திருப்பது உண்மைதான். ஆனாலும் பத்தாயிரம் வருடங்களாக மனிதர்கள் அங்கே போய் வருகிறார்கள் என்பதும் உண்மை. ஒருவர், இருவர் அல்ல, கோடிக் கணக்கான வர்கள் போய் வருகிறார்கள்.எல்லா இடங்களிலும் ஒரு சிலர் இறக்கத்தான் செய்கிறார்கள். சில இடங்களில் வாழ்க்கை, மரணம் இரண்டுக்கும் இடையிலான எல்லைக்கோட்டின் அளவு சிறிது குறைந்துள்ளது. ஆன்மிகரீதியாக அது நல்லதுதான். ஏனென்றால், ஒருவர் தன் மரணம் குறித்து தீவிர விழிப்பு கொள்ளும் போதுதான், பொருள் நிலை இல்லாத ஒன்றைக் குறித்து விழிப்படைகிறார். எனவே கைலாஷ் மலை ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.