தியானலிங்கம் என்பது பல்லாயிரம் மக்களுக்கு ஒரே சமயத்தில் நன்மை தரும் என்பதால்... ஆன்மீகச் சேவையை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பல ஞானிகளுக்கும் தியானலிங்கம் அமைப்பது ஒரு முக்கிய நோக்கமாக, ஓர் உன்னதக் கனவாக இருந்திருக்கிறது. இந்திய வரலாற்றில்... ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களின்படி பார்த்தால், பீகாரில் மூன்று தியானலிங்கங்கள் யாரோ சில ஞானிகளால் அமைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவை யுத்தங்களின்போது அழிக்கப்பட்டிருக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள போஜ்பூரில் ஒரு ஞானி உருவாக்க முயன்ற கிட்டத்தட்ட முழுமையை அடைந்த ஒரு தியானலிங்கம் இன்னும் உள்ளது. அதை மக்களுக்கு அர்ப்பணிக்கும் முன்பாக கடைசி நேரத்தில் விரிசல் ஏற்பட்டு தியானலிங்கம் உருவாகாமல் போயிருக்கிறது.
இதையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால்... ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள தியானலிங்கம் சுமார் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் ஆன்மீகப் பொக்கிஷம். சத்குருவால் சாத்தியமாகியுள்ள ஓர் ஆன்மீகக் கனவு. அனைவருக்கும் அருள் தரும் அதிசயம்.
தியானலிங்கத்துக்குள் அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று கேட்டால்... அதற்கு சக்தியூட்டப்பட்டிருக்கிறது. தியானலிங்கத்தில் ஏழு சக்கரங்கள் தூண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதென்ன ஏழு சக்கரங்கள்? நமது மனித உடலின் இயக்கமும் செயல்பாடும், ஏழு சக்கரங்களால் தான் நிகழ்கிறது என்பது யோக சூத்திரம்.
அந்த ஏழு சக்கரங்களாவன: 1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ஞை 7. சஹஸ்ரஹாரம்
ஒவ்வொரு சக்கரமும் எந்தெந்தச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன என்று விரிவாகப் பார்க்கலாம்.
மூலாதாரம் என்கிற சக்கரம் அமைந்துள்ள இடம், நம் முதுகுத் தண்டின் அடிப்புறம். இது உணவு, உறக்கம், அனுபவச் சேகரிப்பு, தகவல் சேகரிப்பு ஆகியவற்றைக் கையாள்கிறது.
சுவாதிஷ்டானம், பிறப்புறுப்புக்கு மேல் அமைந்துள்ளது. உலகியல் சார்ந்த வாழ்வையும் புலன் நுகர்ச்சியையும் கையாள்கிறது இந்தச் சக்கரம்.
மணிப்பூரகம், நாபிக்கு அடியில் அமைந்துள்ளது. இது உடல் நலம், உடல் உறுதி, உழைப்பு, ஈடுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
அநாகதம் இருக்குமிடம், இதயத்துக்கு மத்தியில். படைப்பாற்றலும் அறிவும் இதன் செயல் தூண்டல்கள்.
விசுத்தி. தொண்டைக்குழியில் அமைந்துள்ள இந்தச் சக்கரம்தான் தீய எண்ணங்களைத் தடுக்கிறது.
ஆக்ஞை. இந்தச் சக்கரம் புருவ மத்தியில் உள்ளது. ஞானம், பேரறிவு இவற்றைக் கையாள்கிறது இது.
சஹஸ்ரஹாரம் என்கிற சக்கரம் தன்னிலை மறந்த பரவசத்தை அளிக்கவல்லது. சித்தர்களின் நிலை தரும் சக்கரம் இது.
சரி... இந்த மனித உடலமைப்பில் பொதிந்துள்ள சக்தி நிலைச் சக்கரங்களை சத்குரு தியானலிங்கத்துக்குள் பொருத்தினாரா? அதெப்படி?