பயங்கரவாதத்தை ஆதரிப்பதன் மூலம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படும் அபாயம் உள்ளது என்று அந்நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
லண்டனில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தெற்காசிய மனிதஉரிமை கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
பிறகு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் தற்போது சர்வதேச அளவில் தனிமைப்படும் ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதம் அந்த நாட்டில் வேரூன்றி இருப்பதன் மூலம் அதிகமாக பாதிக்கப்படுவது பாகிஸ்தான் தான். மேலும் சர்வதேச நாடுகளில் ஆதரவையும் பாகிஸ்தான் இழந்து வருகிறது. அந் நாட்டின் வளர்ச்சியும் குன்றி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘உலக மக்கள் தொகையில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், ராணுவப் பலத்திலும் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவீடாகக் கொண்டு பார்க்கும்போது பொருளாதாரத்தில் உலக அளவில் 26வது இடத்திலும், பொதுவாக 42 இடத்திலும் உள்ளது.
ஐ.நா.வின் மனித வளர்ச்சி குறியீட்டு எண் அடிப்படையில் 188 நாடுகளில் பாகிஸ்தான் 147 இடத்தில் உள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த எதார்த்தங்களை ஒத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவதை விட ஆட்சியாளர்கள் பயமூட்டும் கொள்கையையே பின்பற்றுகின்றனர்.
பாகிஸ்தானிற்கு பாதிப்பு என்ற பீதியை உருவாக்கி உள்நாட்டு வளர்ச்சி சீர்குலைந்திருப்பதை மறைக்கின்றனர்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய-பாக். எல்லைப்பகுதியில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்த நாட்டின் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.