ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பான தகவல்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதித்திருந்த தடை அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு தமது அதிருப்தியை வெளியிட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் சட்ட நிபுணர்களை கொண்டு மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் வகையிலான மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்ல என்ற வகையில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.