ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்த போது 9000 அடி உயரத்திலிருந்து குதித்தபோது நிலைகுழைந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து தப்பித்தார்.
கிரிஸ்டோபர் ஜோன்ஸ் எனும் ஆஸ்திரேலியா வாலிபர், ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து டைவ் செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயக்கமுற்றார்.
தரையை அடைய 30 விநாடிகளுக்கு முன்னதாக அதனை கவனித்துக் கொண்டிருந்த ஜோன்ஸின் பயிற்சியாளர் சாதூர்யமாக செயல்பட்டு மயக்கமுற்றிருந்த ஜோன்ஸிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார்.
எனினும் ஜோன்ஸின் அசைவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் மேலும் தாமதிக்காமல், ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்து விரிவடைய வைத்தார். தொடர்ந்து நினைவிழந்த நிலையிலேயே சிறிது நேரம் பறந்து கொண்டிருந்த ஜோன்ஸுக்கு 3000 அடி உயரத்தில் மீண்டும் நினைவு திரும்பியது.
பின்னர் ரேடியாவில் தனக்கு கிடைத்த வழிகாட்டுதலின்படி, வெற்றிகரமாக தரையிறங்கி உயிர் தப்பியதாக ஜோன்ஸ் தெரிவித்தார். ஜோன்ஸிற்கு காக்கை வலிப்பு நோய் உள்ள போதும், கடந்த 4 வருடங்களாக அவர் சுய நினைவை இழக்கவில்லை.
இது குறித்து ஜோன்ஸ் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், "நான் இருட்டு நிலைக்கு சென்ற புள்ளிவரையிலும் எனக்கு நினைவில் இருக்கிறது. பின்னர் நான் எழுந்தபோது சுமார் 3,000 அடி உயரத்தில் பாராசூட்டிற்கு அடியில் இருந்தேன். உணமையிலேயே நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றுதான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், சாமர்த்தியமாக செயல்பட்டு தனது உயிரை காத்த பயிற்சியாளர் பர்லேனுக்கு மரியாதை செலுத்தினார் ஜோன்ஸ்.