இலங்கையின் தென்பகுதி கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்ம விண்வெளி பொருள் ஒன்று, விண்ணிலேயே எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விண் பொருளை விமானத்தில் பயணம் செய்தவாரே ஆராய்ச்சியாளர்கள் படமெடுத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு விண்ணில் இருந்து விண் பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் அறிவித்து இருந்தனர். அந்த விண் பொருள் இலங்கையின் தென்பகுதி கடலில் விழுவதாகவும் அறிவித்தனர்.
இந்த விண் பொருளுக்கு டபிள்யூ. டி.1190 எப் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர். இந்த விண் பொருள் இலங்கைக்கு தென் பகுதி கடலில் விழும் என எதிர்பார்த்த நிலையில், இலங்கை கடற்பகுதியில் சிறிய ஆய்வுக் கூடம் ஒன்றை அமைத்து கண்காணிப்பு நடவடடிக்கையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அப்பகுதியில் பொதுமக்களும் கூடியிருந்தனர். ஆனால், அந்த பொருள் விழவில்லை, இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் அப்பகுதியில் காத்திருந்த பார்வையாளர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கிடையே சர்வதேச வானியல் ஆய்வு மையம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானியல் முகவர் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த விண் பொருளை போட்டோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்தவாரே இந்த விண் பொருளை ஆராய்ச்சியாளர்கள் படமெடுத்துள்ளனர். இந்துமகா கடல் பகுதியில் வைத்து இந்த விண்பொருளை அவர்கள் பார்த்துள்ளதாக சொல்கின்றனர். இந்த விண்பொருள் விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், மேகக் கூட்டங்கள் அதிக அளவில் இருந்ததால் அந்த விண் பொருள் விழுவதை பூமியில் இருந்து பொதுமக்களால் பார்க்க முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.