மணிப்பூரில் 16 வருடங்களாக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் ஐரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரத்தை வருகிற ஆகஸ்டு மாதம் முடித்துக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என்று அழைக்கப்படுகிறார். இவர், மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பு பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால், அவர் அடிக்கடி கைது செய்யப்படுவதும், விடுதலையாவதும் வாடிக்கையான ஒன்று. இவரை மணிப்பூர் போராளி என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
இந்நிலையில், இவர் தனது நீண்ட வருட உண்ணாவிரதத்தை வருகிற ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி முடித்துக் கொள்ள இருப்பதாகவும், அதன்பின் திருமணம் செய்து கொள்வதோடு, அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவரின் உதவியாளர் தெரிவித்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்துக் கூறிய ஐரோம் ஷர்மிளா “ எனது இத்தனை வருட உண்ணாவிரதத்திற்கு பதிலளிப்பதில் மணிப்பூர் அரசு தோற்றுவிட்டது. எனவே அதை நிறுத்துவது என்று முடிவெடுத்து விட்டேன். எனவே, அரசியலில் போட்டியிட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட முடிவெடுத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.