36 ஆண்டுக்கு பிறகு வெடித்த ஜப்பானின் அஸோ எரிமலை: விளைவுகள் என்னென்ன??
, சனி, 8 அக்டோபர் 2016 (11:37 IST)
‘நெருப்பு வளையம்’ என்னும் பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் கடந்த 36 ஆண்டுகளாக அமைதியாக இருந்த பிரபல எரிமலையான ‘அஸோ’ இன்று அதிகாலை வெடித்து சிதறியது.
ஜப்பான் நாட்டின், புவியியல் அமைப்பில் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் அதிகமான எரிமலைகள் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு மத்திய ஜப்பானில் உள்ள ’ஓன்டேக்’ எரிமலை வெடித்துச் சிதறிய விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இங்குள்ள குமாமோட்டோ பகுதியில் 5,222 அடி உயரமுள்ள ’அஸோ’ எரிமலை கடந்த 36 ஆண்டுகளாக மவுனம்காத்து வந்தது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.46 மணியளவில் இந்த எரிமலை வெடித்துச் சிதறியது.
பயங்கரமான தீக்குழம்புகள் மலையில் அடிவாரத்தை நோக்கி உருண்டுவர இந்த எரிமலை கக்கிவரும் சாம்பல் வானில் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தை நோக்கி பாய்ந்து செல்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையொட்டி, உச்சபட்ச எச்சரிக்க அளவான ஐந்தில் மூன்றாம் எண் எச்சரிக்கையை விடுத்துள்ள உள்ளூர் நிர்வாகம், எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து சிதறும் என்பதால் பொதுமக்கள் யாரும் மலையை நெருங்கிச் சென்றுப் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்