அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிரை, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் எதிர்த்து கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ ஜெனரலாக இருந்து வருபவர் ஆசிம் முனிர். முன்பு இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக இருந்து வந்த நிலையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் ஒருமுறை ராணுவ ஆட்சி அமலானது. இதில் பெரும் பங்கு வகித்தவர் ஜெனரல் ஆசிம் முனிர்.
அதனால் அவர் மீது இம்ரான் கான் மற்றும் பிடிஐ கட்சியினருக்கு பெரும் கோபமும் அதிருப்தியும் உள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதியில் அமெரிக்கா சென்றிருந்த ஆசிம் முனிர் அங்கு தலைமையகம் வாஷிங்டனில் சென்றபோது பாகிஸ்தான் மக்கள் சிலர் அவருக்கு எதிராக போர்டுகளை பிடித்து கோஷம் எழுப்பியுள்ளனர்.
அதில் “துப்பாக்கிகள் பேசும்போது ஜனநாயகம் செத்துவிடுகிறது”, “ஆசிம் முனிர் ஒரு படுகொலையாளன்” என்று போராட்டக்காரர்கள் பலகைகள் பிடித்து போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆசிம் முனிர் வாகனம் கடந்தபோது ”ஆசிம் முனிர்.. நீ ஒரு கோழை” என கத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கும், பஞ்சத்திற்கும் ஆசிம் முனிரின் கொடுங்கோன்மையான ஆட்சியே காரணம் என பாகிஸ்தான் மக்கள் பலரும் ஆசிம் முனிர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K