விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச தீவிரவாத இயக்கம் அல்ல என்று நெதர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சாற்றின் பேரில், நெதர்லாந்தில் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பளித்த ஹேக் நீதிமன்றம், விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஐரோப்பிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டு போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை.
இதன் மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாற்றுகளை சுமத்தலாமே தவிர அவர்களை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது'' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், விடுதலைப்புலிகளுக்கு பணம் திரட்டியதற்காக, குற்றம் சாட்டப்பட்ட 5 தமிழர்களுக்கும் 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அது பற்றி குறிப்பிட்ட நீதிபதி, ''நெதர்லாந்து சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்து முடியாது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை இவர்களுக்கு பொருந்தும் என்பதால், விடுதலைப்புலிகளுக்காக அவர்கள் பணம் சேர்த்தது சட்ட விரோதமாகிறது'' என்று கூறி இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விக்டர் கோப், ''லிபிய அதிபர் கடாபியை எதிர்த்து போரிட்ட விடுதலை போராளிகளுக்கு ஒப்பானவர்கள், விடுதலைப்புலிகள்'' என்று வாதிட்டார்.
பின்னர் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த வழக்கறிஞர் விக்டர் கோப், விடுதலைப்புலிகள், ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெறக்கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படை'' என்று விளக்கம் அளித்தார்.