பாகிஸ்தானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங் தம்மை விடுவிக்க கோரி அந்நாட்டு அதிபர் சர்தாரிக்கு மீண்டும் கருணை மனுவை அனுப்ப உள்ளார்.
லாகூரின் லாக்பத் சிறையில் சரப்ஜித் சிங்கை சந்தித்த அவரது வழக்கறிஞர் அவாஸ் ஷேக் கூறுகையில், இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சிறைக்கைதியான பர்வேஷ் கலீல் சிஸ்டி, மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டதை போன்று தம்மையும் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் வாடி வருவதாகவும், அதனால், தமது கடைசிக் காலத்தை குடும்பத்தினருக்குடன் செலவிட, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சரப்ஜித் வலியுறுத்தியுள்ளார்.
அவரின் கருணை மனு விரைவில் அதிபர் சர்தாரியிடம் சமர்பிக்கப்படும் என வழக்கறிஞர் அவாஸ் ஷேக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நிகழ்ந்த தொடர்பு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி சரப்ஜித் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வழி தவறி பாகி்ஸ்தான் எல்லைக்குள் புகுந்துவிட்ட சரப்ஜித் சிங் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.