மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 7 ஆம் தேதி நள்ளிரவு 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 8 ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. 9 நாட்களாகியும் அந்த விமானம் என்ன ஆனது, கடத்தப்பட்டதா, தெற்கு சீனக்கடலில் விழுந்ததா, நாசவேலைக்கு ஆளானதா என்பதில் ஒன்றைக்கூட உறுதி செய்ய முடியாத நிலை தொடருகிறது.
தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்தாலும், ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதால் மலேசிய விமான நிறுவனமும் சரி, விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்களின் குடும்பங்கள் தவிக்கின்றன.
மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சியில் 14 நாடுகளின் 58 விமானங்கள், 43 கப்பல்கள் ஈடுபட்டு வந்தாலும், விமானம் அல்லது அதன் சிதைந்த பாகங்களின் சுவடுகளைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவும் அந்தமான், நிக்கோபார் தீவு பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியில் தன்னையும் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் இது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது என அந்தமானில் இந்திய பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஹர்மீத் சிங் கூறினார்.
விமானம் மாயமானது தொடர்பான விசாரணை நடத்துகிற அதிகாரிகள், நாசவேலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். மலேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், “விமானத்தைக் கடத்தி நாசவேலைக்கு உட்படுத்தி இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.