பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் 5 தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
விமான நிலையத்தின் அருகாமையில் உள்ள அப்ரா என்ற கிராமத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விமான நிலையம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ராக்கெட்டுகள் விழுந்ததாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் 25க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, விமான நிலையத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, விமான நிலையத்திற்குள் யாரும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்த போது, அந்த முயற்சி ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.