இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை அந்நாட்டு அரசு தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, நீதித்துறையில் அரசு தலையிடும் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இலங்கையின் முதல் பெண் நீதிபதியான ஷிரானி பண்டாரநாயகே மீது, அதிகார வரம்பை மீறி நிர்வாகத்தில் தலையிடுவது உள்ளிட்ட குற்றச்சாற்றுகளின் பேரில், கடந்த 9ம் தேதி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஆளும் மகிந்த ராஜபக்ச கூட்டணி அரசு, இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை அந்நாட்டு அரசு தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்று நீதித்துறையில் அரசு தலையிடும் நடவடிக்கைகளை நிறுத்தி, நீதித்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நீதிபதி ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள விக்டோரியா நியூலாண்ட், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக ரீதியிலான நிர்வாகம், நம்பகத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு குறித்து அமெரிக்காவும், மற்ற நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.