இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்கள் யாரும் தமிழகத்திற்கு செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை, பாதுகாப்பு கருதி இலங்கை மக்கள் தமிழக பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான காரியங்களின் காரணமாக தமிழகம் செல்வோருக்கு சமீப காலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தஞ்சாவூர் பூண்டிமாதா தேவாலயத்திற்கு நேற்று வழிபாடு செய்யச் சென்ற இலங்கை நாட்டைச் சேர்ந்த 184 பேரும், இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும்படியும் இலங்கை வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களுக்குச் செல்வதில் எந்த பாதுகாப்பு சிக்கலும் இல்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.