செல்போன் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு 40 வருடங்களுக்கு முன்பே உலகின் முதல் செல்போன் 1930 - களில் உபயோகப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் யூ டியூப்பில் இணையத்தில் 1938 ஆம் ஆண்டில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. மிக குறைந்த நேரமே ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவில் ஜெர்ட்ரூட் ஜோன்ஸ் என்ற பெண் வயர்லெஸ் போன் மூலம் பேசுவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.
குறுகிய நேரம் மட்டுமே ஓடும் அந்த வீடியோவை 3 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அதற்கு அந்த வீடியோவில் இடம் பெற்ற வயர்லெஸ் போனே காரணம் என கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது புழக்கத்தில் உள்ள செல்போன் முதன்முறையாக 1930-ம் ஆண்டுகளிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவில் வயர்லெஸ் போனில் பேசுபவரின் பேரன் பிளானெட் செக், இந்த படம் எனது பாட்டி ஜெர்ட்ரூட் ஜோன்ஸ் 17 வயது இருக்கும்போது எடுக்கப்பட்டது என்றும் இந்த போன் மசாசூசெட்டில் உள்ள லியோமின்ஸ்டரில் உள்ள தகவல் தொடர்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும் இவ்வைகையான செல்போன்களை சோதித்து பார்க்க ஜெர்ட்ரூட் ஜோன்ஸ் உட்பட 5 பெண்களுக்கு இந்த வயர்லெஸ் செல்போன் 1 வாரத்திற்கு அளிக்கபட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
1930 - களில் வயர்லெஸ் செல்போனை உபயோகிப்பதுபோல் எடுக்கப்பட்ட வீடியோ, செல்போன் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே படமாக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.