ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, அடுத்த 18 மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் படிப்படியாக அந்நாட்டில் இருந்து திரும்பப் பெறப்படும் என்றார்.
நியூயார்க்கில் உள்ள வெஸ்ட் பாயின்ட் ராணுவ பயிற்சி மையத்தில் இன்று பேசிய அதிபர் ஒபாமா, “வரும் 2010ஆம் ஆண்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும். அதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்கவும், அந்நாட்டு மக்களைப் பாதுகாப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அல்-கய்டா பயங்கரவாத அமைப்பால் தீவிர பிரிவினைவாதம் பயிற்றுவிக்கப்பட்ட மையமாக ஆப்கானிஸ்தான் திகழ்ந்தது. அங்கிருந்துதான் இரட்டை கோபுரம் மீதான தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்த தற்போதும் அங்கு திட்டம் தீட்டப்படுகிறது.
எனவே, அல்-கய்டாவினருக்கு எதிராக தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்துவோம். அதற்காக அந்த மண்டலத்தில் உள்ள நட்பு நாடுகளின் கரத்தை வலுப்படுத்தி, அங்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவோம ் ” என்றார்.