1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு, தற்போது சிறையில் உள்ள நிழல் உலக தாதா அபு சலீமை இந்தியா கொண்டு செல்ல அளிக்கப்பட்ட உத்தரவை போர்ச்சுகல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
மும்பை குண்டு வெடிப்புலும், திரைப்பட இசையமைப்பாளர் குல்ஷன் குமார் கொலையிலும் தொடர்புடையவராக குற்றம் சாற்றப்பட்டுள்ள அபு சலீமை போர்ச்சுகல் நாட்டு காவல் துறையினரும், சர்வதேச காவல் துறையினரும் 2002ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரில் கைது செய்தனர். இந்தியாவில் அவர் மீதுள்ள வழக்குகளில் விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகம் மனு செய்து, அபு சலீமை இந்தியா கொண்டு வரும் உத்தரவைப் பெற்றது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த போர்ச்சுகல் நீதிமன்றம், அபு சலீமிற்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தது. அதன் பிறகு இந்தியா கொண்டு வரப்பட்ட அபு சலீம், அவருடைய காதலியும் இந்தி நடிகையுமான மோனிகா பேடி ஆகியோர் மீது 8 குற்றங்கள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அபு சலீம் நாடு கடத்த அனுமதிக்கப்பட்டபோது விதித்த நிபந்தனைகளை இந்திய காவல் துறை நிறைவேற்றவில்லை என்று கூறி, நாடு கடத்தல் உத்தரவை இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது அபு சலீமிற்கு எதிரான வழக்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளதால், அபு சலீமையும், மோனிகா பேடியையும் மீண்டும் போர்ச்சுகல் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ம.பு.க.விற்கு ஏற்பட்டுள்ளது.