வலுவான ஊழல் எதிர்ப்பு லோக்பால் மசோதா தொடர்பான அண்ணா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதை நியுயார்க்கில் உள்ள இந்திய-அமெரிக்கர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய ஜனநாயகத்துக்கும், மக்களின் சக்திக்கும் கிடைத்த வெற்றி இது என அவர்கள் கூறினர்.
நியுஜெர்ஸி மற்றும் பாஸ்டனில் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தொண்டர்கள் கூடி ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஊழலுக்கு எதிராக அவர் பெற்றுள்ள வெற்றிக்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மசோதா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய மக்கள் மற்றும் இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என நியுஜெர்ஸியில் உள்ள தன்னார்வத் தொண்டர் தீபக் குப்தா தெரிவித்தார்.
லோக்பால் மசோதா தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தையும் ஹசாரேவின் உண்ணாவிரதத்தையும் உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்கள் உன்னிப்பாக கவனித்துவந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், பெருமளவு இந்தியர்கள் நியுஜெர்ஸியில் இந்தியக் கொடியுடன் ஊர்வலம் வந்தனர் தேசிய கீதத்தைப் பாடியும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடினர் என அவர் கூறினார்.